நகரப் படலம் - 130

bookmark

மாளிகையின் கொடிகள் தேய்ப்பதால் மதி தேய்தல்

130.

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம்போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே.
 
நெடுவரை    காண்வரு- பெரிய மலைகளில் காணப்படும்; கதலிக்
கானம்  போல்-  வாழை மரங்களை உடைய தோப்பைப் போல; தாள்
நிமிர்   பதாகையின்   குழாம் தழைத்தன-  கொடிமரங்கள்  நீண்ட
கொடிகளின்  தொகுதி  மிகுந்துள்ளன;; சேண்மதி வாள்நனி மழுங்கிட
மடங்கி-  வானத்திலுள்ள  சந்திரன்  தன் ஒளிமிக மழுங்கி  வளைந்து;
வைகலும் தேய்வது-  நாள்தோறும்  தேய்ந்து போவது; அக்கொடிகள்
தேய்க்கவே- அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

நகரத்துக்     கொடிகள் பெரிய  மலைகளில்    காணப்படும்  வாழை
தோப்பை  போலக்  காணப்படும்;  வானத்தில்    உள்ள சந்திரன் ஒளி
குறைந்து    வளைந்து    நாள்தோறும்      தேய்ந்து   காணப்படுவது
அக்கொடிகள்  சந்திரனுன் மீது   உராய்வதனாலேயே என்றார். சந்திரன்
தேய்பிறையில்   தேய்வதற்குக்   காரணம்   கற்பித்துக்  கூறியதால் இது
ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.                                 38