நகரப் படலம் - 131

bookmark

அயோத்தி நகரெங்கும் மாடமாளிகைகளும்
கூடகோபுரங்களும் அமைந்தமை

மாட மாளிகைகளின் ஒளியும் மணமும்
 
131.

பொன் திணி மண்டபம் அல்ல, பூத்தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.
 
பொன்திணி மண்டபம் அல்ல-  பொன்னால்  கட்டிய  மண்டபம்
அல்லாதவை; பூத்    தொடர்- மலர்களால் அமைந்த மண்டபங்களாம்;
மன்றுகள் அல்லன- பலர் கூடுமிடமாகக்  கட்டிய  பொது  மன்றங்கள்
அல்லாதவை;    மாடம்   மாளிகை-   மேன்மாடியோடு   அமைந்த
மாளிகைகளாம்;  குன்றுகள்  அல்லன- செய்  குன்றுகள் அல்லாதவை;
மணி   செய்   குட்டிமம்-   இரத்தினங்களைக்  கொண்டு  அமைத்த
முற்றங்களாம்;   முன்றில்கள்   அல்லன-  முற்றங்கள்  அல்லாதவை;
முத்தின் பந்தரே- முத்துப் பந்தல்களேயாகும்.

அந்நகரத்தில்      பொன்   மண்டபங்களும்,  மலர்மண்டபங்களும்
பொதுமன்றங்களும்,  செய் குன்றுகளும்,  மணி  மேடைகளும்,  முத்துப்
பந்தல்களும்   எங்கும்   காணப்பட்டன;   வெற்றிடங்களே    இல்லை
என்கிறார்.  இது  முதல்  நான்கு  பாடல்களில்  மாட   மாளிகைகளின்
ஒளியும்  மீண்டும்  கூறப்படுகிறது. குட்டிமம்:  முன்றில்கள்   (தளவரிசை
செய்த  தரை).  மன்று: பொது மன்றங்கள். மாடம்:  உப்பரிகை.  குன்று:
செய்குன்று (கட்டு மலை எனவும் கூறுவர்).                      39