நகரப் படலம் - 121

bookmark

121.

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.
 
வயிர  நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே;
மரகதத்  துலாம்-   மரகதத்தாலாகிய   உத்தரத்தை;  செயிர்  அறப்
போதிகை  கிடத்தி-  குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது
பொருத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன
போலத்  தோன்றுமாறு  செய்தனவும்;  உம்பர் நாட்டவர் அயிர் உற
இமைப்பன -   தேவ    நாட்டவரும்     (தமது  விமானமோ  என)
ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்;  அளவில் கோடியே-
அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.

அயோத்தி    மாநகரின்    மாளிகைகள்   அளவற்றன  என்கிறார்.
துலாம்- உத்தரக் கட்டை

போதிகை-   தூண்களின் தலையில் பாரம்தாங்கும்படி  வைக்கப்படும்
கட்டை.     இரு    பாலும்    கீழ்நோக்கிய    வாழைப்பூ    வடிவம்
அமைந்திருக்கும்.

 அயிர்- ஐயம்; வயிரம்- காழ்த்தல்                             29