திரு அவதாரப் படலம் - 310

bookmark

குமாரர்கள் முனிவர்களிடம் சென்று
மாலை நகர் மீளுதல்

310.

வீரனும். இளைஞரும். வெறி பொழில்களின்வாய்.
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்.
சோர் பொழுது. அணிநகர் துறுகுவர்; எதிர்வார்.
கார் வர அலர் பயிர் பொருவுவர். களியால்.
 
வீரனும்   இளைஞரும்-  மாவீரனாகிய ராமபிரானும்.  தம்பியரும்;
வெறிபொழில்களின்   வாய் -  மணம்  செறிந்த  சோலைகளிடத்தே
(சென்று);    ஈரமொடு   உரைதரு  -   அன்போடு   (வந்தவரிடம்)
உரையாடுகின்ற; முனிவரர் இடைபோய் -முனிவர்களிடம்  (காலையில்)
சென்று;  சோர்  பொழுது அணிநகர் துறுகுவர்-மாலைப் பொழுதிலே
அழகிய அயோத்தி நகரை    அடைவர்;   எதிர்வார் -    போகும்
போதும்    வரும் போதும்  எதிர்ப்படும்  நாட்டு மக்கள் எல்லோரும்.
களியால் - (இராம பிரானையும்  தம்பியரையும் கண்ட) களிப்பில்; கார்
வர அலர் பயி்ா பொருவுவர் -மழை வர. மகிழும் பயிர்களை ஒத்துக்
காணப்படுவர்.

கார்:   மேகம் (மழையைக் குறித்தது). வெறிபொழில்: மணம் கமழும்
சோலை.  ஈரமொடு  உரைதரு:   அன்போடு பேசுகின்ற. ஈரம்: அன்பு.
முனிவரர்: (வசிட்டனை ஒத்த). முனிவர்கள் ‘’சோர் பொழுது துறுகுவர்’’
என்றதால் காலையில் சென்று என உரை கூறப்பட்டது.  சோர்பொழுது:
வெயில்  சோரும்.  பொழுது.  துறுகுதல்:  சேர்தல்  எதிர்வார்: எதிரில்
வருபவர்கள்.   மழைமேகம்   கண்டு  பயிர்கள்   மகிழ்வது   இயல்பு.
மேகவண்ணனான  ராமனைக்  கண்டு  மக்கள் மகிழ்ந்தனர்  என்கிறார்
என்பது     எத்துணை    பொருந்தும்.    முனிவர்கள்     தம்மைக்
காணவருவோரிடமும்.  பாடம்  கேட்கும்  மாணவரிடமும்  அன்போடு
உரையாடும்  பண்பினர்  என்பதால்  ‘’’ ஈரமொடுவரை தரு’’ என்றார்.
பொருவுதல்: ஒப்பாதல்.

அரசிளங்குமரர் நால்வரும் நாள்தோறும் காலையிலே அந்நகருக்குப்
புறத்தே  உள்ள  சோலைகளில்  வாழும்  முனிவர்களிடம்  சென்று -
உரையாடி  -  நுண்ணிய  நூற்பொருள் கேட்டு  மாலையில் நகருக்குத்
திரும்புவர்.  எதிர்ப்படும்  மக்களெல்லாம் மழைவரக் கண்டு  தழைதரு
பயிர் போல. இவர்களைக் கண்டு மகிழ்வர் என்பது கருத்து.       129