திரு அவதாரப் படலம் - 279
மற்றை முனிவரும் ஆசிகூறி ஏகுதல்
279.
வாங்கிய துயருடை மன்னன். பின்னரும்.
பாங்குறு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல்கொண்டு.
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா.
நீங்கினர்; இருந்தனன். நேமி வேந்தனே.
வாங்கிய துயர் உடை மன்னன்- துயரம் நீங்கிய மன்னனாகிய
தயரதன்; பின்னரும் பாங்கு உறுமுனிவர் தாள்பழிச்சி - பின்பு.
கலைக்கோட்டு முனிவனைச் சூழ்ந்திருந்த முனிவர்களையெல்லாம்
வணங்கிப் புகழ்ந்து; ஏத்தல் கொண்டு ஓங்கிய உவகையர்- போற்றிக்
கொண்டாடியமையால் மகிழ்ச்சி கொண்ட அம்முனிவர்கள். ஆசியோடு
எழா நீங்கினர் - அரசனுக்கு ஆசிகூறி எழுந்து சென்றனர்;
நேமிவேந்தன் இருந்தனன் - அத் தசரதவேந்தன் நலமே இருந்தனன்.
வாங்கியதுயர்: நீங்கிய துயரம். ‘பாங்குடைமுனிவர்’ என்பதற்கு
நல்லொழுக்கம் உடைய முனிவர்கள் என்பதும் பொருளாம். பாங்கு:
ஒழுக்கம். பழிச்சியேத்தல்: மிகுதியாக ஏத்துதலுமாம். நேமி: சக்கரம்
ஆணையாகிய நேமி என்பர். ‘பின்னரும்’ என்றது. கலைக்கோட்டு
முனிவனை வணங்கிய பின்னர் மற்ற முனிவர்களையும்
வணங்கினான் என்பதை உணர்த்தும். எழா: எழுந்து (செயா என்ற
வாய்பாட்டு வினைஎச்சம்). 99
