திரு அவதாரப் படலம் - 223
223.
‘விம்முறும் உவகையர். வியந்த நெஞ்சினர்.
“அம்ம! ஈது. இது ” என. அகலும் நீள் நெறி.
செம்மையின் முனிவரன் தொடரச் சென்றனர்:-
தம் மனம் என மருள் தையலார்களே.
விம்முறும் உவகையர் - விளங்கிப் பெருகும் மகிழ்ச்சி
உடையவராயும்; வியந்த நெஞ்சினர் - பெருமிதங் கொண்ட
மனத்தினராயும் உள்ள; மருள் தையலார்கள் - மருண்ட கண்களை
உடைய அம்மாதர்கள்; செம்மையின் முனிவரன் தொடர - சிறந்த
அம்முனிவன் அவர்களைத் தொடர்ந்து வர; அகலும் நீள் நெறி -
அகன்று நீண்ட அந்த வழியிலே; அம்ம ஈது ஈது என - எங்கள்
இருப்பிடம் இதுதான் இதுதான் என்று; தம்மனம் எனச் சென்றனர் -
வேகமாகச் செல்லும் தமது மனம் போலச் சென்றார்கள்.
விம்முதல்: விளங்கிப் பெருகுதல். அம்ம வியப்புக்குறிப்பு.
வியத்தல்: எவராலும் இயலாத செயலைச் செய்தோம் என்னும்
பெருமிதம் அடைதல். மனம் என: மனத்தின் வேகத்தைப் போல.
மருள்: கண் இயல்பு. தையல்: அழகு. நீள் நெறி: நீண்ட வழி. எமது
இருப்பிடம் ‘இதுதான் இதுதான்’ என்று சொல்லிக் கொண்டே நீண்ட
வழியிலே அம்முனிவரை அழைத்துக் கொண்டு தமது மனம் போலவே
வேகமாகச் சென்றனர் அம்மகளிர் என்பது கருத்து. 44
