திருவேட்கை

திருவேட்கை

bookmark


ராகம் - நாட்டை தாளம் - சதுஸ்ர ஏகம் 

மலரின் மேவு திருவே! - உன்மேல் 
  மையல் பொங்கி நின்றேன், 
நிலவு செய்யும் முகமும் - காண்பார் 
  நினைவ ழிக்கும் விழியும் 
கலக லென்ற மொழியும் - தெய்வக் 
  களிது லங்கு நகையும், 
இலகு செல்வ வடிவும் - கண்டுன் 
  இன்பம் வேண்டு கின்றேன். 

கமல மேவும் திருவே! நின்மேல் 
  காத லாகி நின்றேன். 
குமரி நினை இங்கே - பெற்றோர் 
  கோடி யின்ப முற்றார். 
அமரர் போல வாழ்வேன் - என்மேல் 
  அன்பு கொள்வை யாயின், 
இமய வெற்பின் மோத - நின்மேல் 
  இசைகள் பாடி வாழ்வேன். 

வாணி தன்னை என்றும் - நினது 
  வரிசை பாட வைப்பேன்! 
நாணி யேக லாமோ? - என்னை 
  நன்க றிந்தி லாயோ? 
பேணி வையமெல்லாம் - நன்மை 
  பெருக வைக்கும் விரதம் 
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன் 
  பொறிக ளாவ ரன்றோ? 

பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய் 
  பூண்க ளேந்தி வந்தாய்! 
மின்னு நின்றன் வடிவிற் - பணிகள் 
  மேவி நிற்கும் அழகை 
என்னு ரைப்ப னேடீ - திருவே! 
  என்னு யிர்க்கொ ரமுதே! 
நின்னை மார்பு சேரத் - தழுவி 
  நிக ரிலாது வாழ்வேன். 

செல்வ மெட்டு மெய்தி - நின்னாற் 
  செம்மை யேரி வாழ்வேன், 
இல்லை என்ற கொடுமை - உலகில் 
  இல்லை யாக வைப்பேன், 
முல்லை போன்ற முறுவல் - காட்டி, 
  மோக வாதை நீக்கி, 
எல்லை யற்ற சுவையே! - எனை நீ 
  என்றும் வாழ வைப்பாய்.