தாடகை வதைப் படலம் - 356

bookmark

பாலைவனத்தின் பசையற்றநிலை

356.

தா வரும் இரு வினை செற்று. தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து. முத்தியில்
போவது புரிபவர் மனமும். பொன் விலைப்
பாவையர் மனமும். போல் பசையும் அற்றதே!
 
தா வரும் இருவினை செற்று  -  தாவி   வருகின்ற   நல்வினை.
தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப்
பகை    அரண்கடந்து -  தள்ளுதற்கு   அரிய மூன்று  வகைப்பட்ட
உயிர்ப்  பகை  ஆகிய  காவலையும்  கடந்து;  முத்தியில்  போவது
புரிபவர்மனமும் - வீடு  பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும்
ஞானிகள்  மனமும்; பொன்   விலைப்   பாவையர்   மனமும்  -
பொன்னுக்குத்   தமது  மேனியை   விலைகூறும்  விலை  மாதர்களின்
மனமும்;  போல் பசையும் அற்றதே - (எவ்வாறு பசையற்றிருக்குமோ
அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது. 

தா+வரும்.:   தாவிவரும்.  நல்வினையும்    பிறப்புக்குக்   காரணம்
என்பதால்  இருவினையும்  ‘செற்று’  என்றார்.   மூவகைப் பகையாவது.
காமம்  வெகுளி  மயக்கம்  என்னும்   மூன்றுமாம்.  இருவினை செற்று
மூவகைப்பகை  வென்றவர்களே வீடு  பேறடைதற்கு  குரியர் என்பதால்
‘முத்தியில்  போவது  புரிபவர்’   என்றார்.  ஞானிகள்  பற்றற்றவர்கள்.
பாவை:  உவமை  யாகு  பெயர்.   விலை  மாதர்  பசையற்றவராதல் -
தம்மை    நாடிவந்தவரிடம்     இரக்க    மற்றிருத்தலாம்.    எனவே
அப்பாலைநிலம்  முத்தியை   விரும்பும்  ஞானிகளின் மனம் போலவும்
பொன்  விலைபாவையர்  மனம் போலவும்   பசையற்றிருந்தது என்பது
கருத்து. தா: துன்பமும் ஆம்.                                 15