தாடகை வதைப் படலம் - 342

bookmark

அங்கநாட்டு வரலாறும் காமனாச்சிரம வரலாறும் (342-343)

342.

‘திங்கள் மேவும் சடைத்
   தேவன்மேல். மாரவேள்.
இங்கு நின்று எய்யவும்.
   எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட. பூளை
   வீ அன்ன தன்
அங்கம் வெந்து. அன்று தொட்டு
   அனங்கனே ஆயினான்.
 
திங்கள் மேவும் சடைத் தேவன் மேல்-சந்திரனைத்  தாங்கியுள்ள
சடைமுடியையுடைய  தேவனாகிய சிவபிரான் மேல்; மார வேள் இங்கு
நின்று    எய்யவும்  -   மன்மதன்.  மலரம்புகளை  இங்கு  இருந்து
எடுத்தெய்யவே; எரிதரு  நுதல்  விழி - நெருப்பைக் கக்கும் நெற்றிக்
கண்ணில்; பொங்கு  கோபம்சுட - பொங்கி எழுந்த சீற்றம் சுடுதலால்;
பூளை வீ அன்ன தன் அங்கம்வெந்து - பூளைப் பூப்போன்ற  தனது
உடல் முழுதும்   எரிந்து   போய்.  அன்று  தொட்டு  அனங்கனே
ஆயினான்  -  அந்த   நாள்  முதல்  மன்மதன்  அங்க  மற்றவனே
ஆய்விட்டான்.

திங்கள்:    சந்திரன்.   சடைத்தேவன்:    சிவபிரான்.   மாரவேன்:
மன்மதன். ‘வேள்’ என்பதற்கு விரும்பத்தக்க  அழகுடையவன்  என்பது
பொருள்.  நுதல்  விழி:  ஏழாம்  வேற்றுமை  உருபும் பயனும்  உடன்
தொக்கத் தொகை. விழி: முதல்

நிலைத்   தொழிற் பெயர்.   வீ:  நன்குமலர்ந்த   மலர்.   அனங்கன்:
அங்கம்   இல்லாதவன்.  பூளைவீ:  பூளைப்பூ  காற்றில்   பறக்குமளவு
லேசானது. ‘மாருதமறைந்த பூளை’ என்பார் பின்னும்

சிவபிரானது   நெற்றிக்கண்    நெருப்பால்    மன்மதன்   எரிந்து
சாம்பலானான் என்பது கந்தபுராணத்துட் கூறப்படும் செய்தியாம்.      1