தாடகை வதைப் படலம் - 343
343.
‘வாரணத்து உரிவையான் மதனனைச்
சினவு நாள்.
ஈரம் அற்றும் அங்கம் இங்கு
உகுதலால். இவண் எலாம்.
ஆரணத்து உறையுளாய்! அங்க
நாடு; இதுவும். அக்
காரணக் குறியுடைக்
காமன் ஆச்சிரமமே.
ஆரணத்து உறை யுளாய் - வேதங்களை வாழும் இடமாக
உடையவனே; வாரணத்து உரிவையான் - யானைத் தோலைப்
போர்த்தவனாகிய சிவபிரான்; மதனனைச் சினவு நான்- மன்மதனைக்
கோபித்த நாளில்; ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் -
பசையற்றுப் போய் அவனது சிதைந்த உடல் இங்குச் சிதறி
வீழ்ந்ததால்; இவணெலாம் அங்கநாடு - இந்த இடமெல்லாம் அங்க
நாடு என அழைக்கப்படும் இடமாகும்; இதுவும் அக் காரணக்குறி
உடைகாமன் ஆச்சிரமமே - இந்த இடமும். அந்தக்காரணக் குறியை
உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.
வாரணம்: யானை. உரிவை: உரித்த தோல். யானை உரித்த
தோலைச் சிவபிரான் போர்வையாக உடையவன் என்பது புராணச்
செய்தி. தனது யாக நிலையைக் கெடுத்து. காம இச்சையை
யுண்டாக்குவதற்கு மலர்க்கணைகளை எய்த மன்மதனைக் கோபித்து
எரித்த செய்தி புராணத்துட் கூறப்பட்டதாகும்; ஈரம்: உடற்பசை
உகுதல்: சிதறுதல் ஆரணம்: வேதம். ஆரண+துறை எனவும்.
ஆரணத்து -உறையுள் எனவும் இருவிதமாகவும் விரித்துப் பொருள்
கூறலாம். 2
