கையடைப் படலம் - 323

bookmark

323.

‘நிலம் செய் தவம் என்று உணரின்.
   அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும்.
   அன்று; நகர். நீ. யான்
வலம் செய்து வணங்க. எளிவந்த
   இது முந்து என்
குலம் செய் தவம்’ என்று
   இனிது கூற. முனி கூறும்:
 
நெடியோய்.  நகர் யான் வலம் செய்து வணங்க - நீண்ட தவம்
உடையீர்!   இந்த நகரத்திலே நான் வலம் வந்து வணங்கும்படியாக; நீ
எளிவந்த  இது  -  தாங்கள்  எளிமையாக வந்த இந்தச் செயலானது;
நிலம்  செய்தவம் என்று உணரின் அன்று -  இந்த  நாடு  செய்த
தவப்பயன்  தானோ  எனில் அல்ல; என் நலம் செய்வினை உண்டு
எனினும் அன்று -  எனது   நல்வினை  செய்து காட்டிய பயனாலோ
என்றால்  அல்ல;  எம்முந்து குலம்  செய்தவம் - எங்களது முந்திய
குலத்தினோர் செய்த  தவப்பயனே யாகும்;  என்று இனிது கூற முனி
கூறும் -  என்று   தயரதன்  இனிய  முகமன்கூற.  அதனைக் கேட்ட
முனிவன் கூறுவான்.

நிலம்:     இடவாகு பெயராய் மக்களை உணர்த்திற்று. செய்தவம்:
வினைத்தொகை  ‘தவம்’  தவப்பயன்  அல்லது  புண்ணியமும் ஆம்.
வலம்: வலம் வருதல். எளிமை: சுலபம். தயரதன். முனிவனை நோக்கி
‘’நெடியோய்’’ என்றது. நீண்ட தவத்தை உணர்த்தி நின்றது.       7