குலமுறை கிளத்து படலம் - 724
கடல் கடைந்த காவலன்
724.
‘அரைசன் அவன் பின்னோரை.
என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி
இவர் குலத்தோன் ஒருவன்காண்-
நரை திரை மூப்பு இவை மாற்றி
இந்திரனும் நந்தாமல்.
குரை கடலை நெடு வரையால்
கடைந்து. அமுது கொடுத்தானும்.
அரைசன் - அந்தக் ககுத்த மன்னனது; அவன் பின்னோரை -
குலத்தில் பின்பு தோன்றிய அரசர்களை; அளப்பு -
(இத்தன்மையுடையவர் என்று) அளவிட்டுச் சொல்லுதல்; என்னாலும்
அரிது - என்னாலும் முடியாது; நரை - முடி வெளுத்தலும்; திரை -
உடம்பின் தோல் சுருங்குதலும்; மூப்பு - (இவற்றிற்குக் காரணமான)
முதுமைத் தன்மையும்; இவை - என்னும் இவற்றை; மாற்றி - நீக்கி;
இந்திரனும் - தேவேந்திரனும்; (மற்ற தேவர்களும்); நந்தாமல் -
சாகாதபடி; குரைகடலை - ஒலிக்கின்ற பாற்கடலை; நெடுவரையால் -
பெரிய (மந்தர) மலையால்; கடைந்து - கடைந்து; அமுது
கொடுத்தானும் - (அதிலிருந்து) தேவர்களுக்கு அமுதத்தை எடுத்துக்
கொடுத்தவனும்; உரை குறுக - (மொழியில்) சொற்கள் குறையும்படி.
நிமிர் கீர்த்தி- மிகுதியான புகழையுடைய; இவர் குலத்தோன் - இந்த
மைந்தர்களது குலத்தில் உதித்த; ஒருவன் காண் - ஓர் அரசனே
ஆவான்.
உரை குறுக நிமிர்கீர்த்தி - இக் குமாரர்களின் பெரும்புகழ்
சொல்லுக்கு அடங்காது. அதாவது இவர்களின் புகழைக் கூறுவதற்கு
வேண்டிய சொற்கள் உலகிலே இல்லை என்பது. இந்திரனும் -
எச்சவும்மை. உயர்வு சிறப்பும்மை. 4
