குலமுறை கிளத்து படலம் - 722

bookmark

இட்சுவாகு

722.

‘பிணி அரங்க. வினை அகல.
   பெருங் காலம் தவம் பேணி.-
மணி அரங்கு அம் நெடு முடியாய்!-
   மலர் அயனை வழிபட்டு.
பணி அரங்கப் பெரும் பாயற்
   பரஞ் சுடரை யாம் காண.
அணி அரங்கம் தந்தானை
   அறியாதார் அறியாதார்!
 
மணி    - நவரத்தினங்களும்; அரங்கு - அழுத்திப்பதித்த;  அம்
நெடுமுடியாய் - அழகிய பொன்முடியையுடைய  சனக மன்னனே! பிணி
அரங்க   -   நோய்   நீங்கவும்;   வினை  அகல  -  (அவற்றிற்குக்
காரணமாகிய)   தீவினைகள்   ஒழியவும்;   பெருங்காலம்  -  அநேக
ஆண்டுகள்;  தவம்பேணி  -  தவத்தை விருப்பத்தோடு செய்து; மலர்
அயனை  -  தாமரைப்  பூவில்  தோன்றிய  பிரமனை;  வழிபட்டு  -
வணங்கி  வழிபட்டு;  பணி  அரங்கம்  -  (அவன்  அருளால்) ஆதி
சேடனாகிய   பாம்பின்   உடலை;  பெரும்பாயல்  -  பெரிய  பள்ளி
மெத்தையாக;   பரஞ்   சுடரை   -   கொண்டுள்ள  ஒளிவடிவமான
திருமாலை;  யாம்காண்  - எம்மைப் போன்றவரும் கண்டு  உய்யுமாறு;
அணி அரங்கம்-அழகிய திருவரங்க விமானத்தோடு; தந்தானை-(சத்திய
உலகிலிருந்து     பூமிக்கு)   கொண்டு   வந்த   இந்த வம்சத்தவனான
இட்சுவாகு  மன்னனை;  அறியாதார்  -  அறியாதவர்; அறியாதார் -
அறிவில்லாதவரே ஆவர்.  

திருவரங்கம்:     வைகுண்டம். திருப்பாற்கடல். யோகியரின் உள்ளத்
தாமரை  என்னும்  இவற்றைக்   காட்டிலும்  திருமால்   மனம் உவந்து
எழுந்தருளியிருக்கும்  இடமாதல்  பற்றி  இவ்  விமானத்திற்கு  ‘ரங்கம்’
(அரங்கம்)   எனப்   பெயர்     அமைந்தது.   இட்சுவாகு   மன்னன்:
வைவச்சுவத  மனுவின்  மகனாகிய    இட்சுவாகு  மன்னன்  பிரமனை
நோக்கிப்  பலகாலம்  தவம்    புரிந்து  அவன் அருளால் திருமாலைப்
பெற்றுத்  திருவயோத்திக்கு  எழுந்தருளச்செய்து    பிரதிட்டை செய்து
வழியாடு  செய்தான்.  அந்த அரங்கநாதனே   இரவிகுல மன்னவர்க்குக்
குலதெய்வமாக   விளங்கினான்.  பரஞ்சுடர்  -  கதிரவன்.    சந்திரன்.
நெருப்பு என்னும் முச்சுடர்களிலும் மேம்பட்ட ஒளியுருவம்.          2