குலமுறை கிளத்து படலம் - 723

bookmark

ககுத்தன்

723.    

‘தான். தனக்கு வெலற்கு அரிய
   தானவரை. “தலை துமித்து. என்
வான் தரக்கிற்றிகொல்?” என்று
   குறை இரப்ப. வரம் கொடுத்து. ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய்.
   இகல் புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலை. பண்டு. இந்திரன்காண்.
   விடை ஏறாய்ச் சுமந்தானும்.
 
தான்    - இந்திரன் (தான்); தனக்கு வெலற்கு அரிய - தன்னால்
வெல்வதற்கு  முடியாத;  தானவரை - அசுரர்களின்; தலை துமித்து -
தலைகளைத் துணித்து;  வான்  தரக்கிற்றி கொல் -  தேவலோகத்தை
(அவர்களிடமிருந்து)  மீட்டுக்  கொடுக்க   வல்லமையுடையவரா  நீர்?;
என்று  -  என்று கூறி;  குறை இரப்ப - (தனது) குறையைச் சொல்லி
வேண்ட;  வரம்  கொடுத்து  -  (அவ்வாறே செய்வதாக  வாக்களித்து
இந்திரனுக்கு)   அந்த   வரத்தைக்   கொடுத்து;   ஆங்கு ஏன்று  -
அப்பொழுதே (அச்செயலை) மேற்கொண்டு; எடுத்த சிலையினனாய் -
கையில்  வில்லைப்  பிடித்தவனாக;  இகல் புரிந்த -  (அசுரர்களோடு)
போர்  செய்த;  இவர்  குலத்து  - இந்தக்  குமாரர் தோன்றிய இரவி
வம்சத்திலே  பிறந்த;  ஓர்  தோன்றலை  -  புரஞ்சயன் என்னும் ஓர்
அரசனை;  பண்டு  -  முன்  காலத்தில்;  விடை ஏறு ஆய்- காளை
வடிவமாய்;   சுமந்தானும்   -  (அப்பொழுது)   சுமந்து  நின்றவனும்;
இந்திரன் காண் - தேவர்தலைவனான அந்த இந்திரனே யாவான்.  

ககுத்தன்:     முன் காலத்தில் தேவர்க்கும்   அசுரர்க்கும்  நிகழ்ந்த
போரில்  தேவர்கள்  தோற்றார்கள். அதனால் தேவர்கள்  திருமாலிடம்
முறையிட.    அவனும்      அவர்களை   நோக்கி   ‘நான்   பூமியில்
இட்சுவாகுவின்  மகனான  சசாதன்  மகனாகப்    புரஞ்சயன்  என்னும்
மன்னனாகத்  தோன்றி  அந்த  அசுரர்களை   அழிப்பேன்’  என்றான்.
தேவர்கள்   அவனிடம்   சென்று   கூற.   அப் புரஞ்சயனும்  ‘இந்தி
ரன்     வாகனமாக    எனக்கு    அமைந்தால்   அவன்மேல்  ஏறிப்
போர்செய்து    அசுரரை   மாய்ப்பேன்’   என்றான்.     அப்பொழுது
இந்திரனும்  தடைசொல்லாது  காளை  வடிவம்    எடுக்கப்  புரஞ்சயன்
அதிலேறிப்  போர்  செய்து    அசுரரை  அழித்தான்  எருது வடிவான
இந்திரனின்   ‘ககுத்’   எனப்படும்    முசுப்பில்  ஏறி  இருந்தமையால்
‘ககுத்தன்’ எனப்பட்டான்.                                    3