காலப் பிரமாணம்
காலப் பிரமாணம் பராசர முனிவரே! நிர்க்குணமும் (இழி குணம் ஏதும் இல்லாதவரான), அப்பிரமேயமும் (வாய்ப்புகள்), தூய்மையும், நிர்மலமுமான பரம்பிரம்மத்திற்கு சிருஷ்டி, ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை தோன்றியிருக்கக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார்.மைத்ரேயரே! அக்னிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்கு காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களை செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் இந்த பிரபஞ்சத்தில் சிருஷ்டி (உயிரினங்களின் தோற்றம்) உண்டாக்கிய விதத்தை சொல்கிறேன்.நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்கு பிதாமகனான, பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுள் உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும். இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பை கூறுகிறேன் கேட்பாயாக!மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை, அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம் அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பட்சங்களோடு கூடிய ஒரு மாதம். அந்த மாதம் பனிரெண்டானால் தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சிணாயனம் காலம் என்பது தேவர்களுக்கு இரவு பொழுதாகவும், உத்திராயணம் காலம் என்பது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் இருக்கும்.தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, (சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும்) திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்து நூறு ஆண்டுகள். துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி. சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும். சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம். சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம்.சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களை பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது.இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரம்மனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மனுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மனுவந்தர தோற்றத்தை பற்றி கூறுகிறேன் கேட்பாயாக! மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மனுக்கள், மனு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏக காலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏக காலத்திலே சங்கரிக்கப்படுவார்கள்.தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மனுவந்தரம் என்று சொல்லப்படும்.இந்திராதி நூறு தேவதைகளுக்கும், மனுக்களுக்கும் இதுவே அவர்களுக்கு உரிய ஆயுள் காலமாகும்.ஒரு மனுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்திராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மானுட பிறவியில் முப்பது கோடியே அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.இப்படி பதினாழு மனுவந்தரங்களானால் பிரம்மனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்த தினப் பிரளயத்தில் பூலோக, புவர்லோக, சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும். அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜூவாலையின் கனல் வேகத்தை பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்கு செல்வார்கள்.அதன்பிறகு, சப்த சாகரங்களும் பொங்கி திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும். அந்த சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அனுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேஷனாகிய சயனத்தில் சயனித்து கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு. ஆனால், சதுர்முகப் பிரம்மனின் ஆயுள் முடியும். அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரம்மனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இது வராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!
