கார்முகப் படலம் - 800
800.
‘எங்கு நின்று எழுந்தது. இந்த
இந்து? வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று. அனங்கன் எய்த
அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல்
விடம் பொழிந்தது; என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று;
அகம் களங்கம் இல்லையே!
என் நெஞ்சு- எனது மனத்திலே; உலாவந்து - உலாவி வந்து;
அங்கு - அந்த இடத்திலே; இயன்று - அச்செயலோடு பொருந்தி;
அனங்கன் எய்த - மன்மதன் செலுத்திய; அம்பின் வந்த -
அம்பினால் உண்டான; சிந்தைநோய்- மன நோயானது; பொங்குகின்ற
- பெரிதும் வெளிப்படும் இடமான; கொங்கைமேல் - (என்)
தனங்கள்மேல்; விடம் பொழிந்தது - நஞ்சினை ஊற்றியது; என்னினும்
- என்றாலும்; கங்குல் வந்த - (இது) நேற்றிரவில் தோன்றி வருந்திய;
திங்கள் அன்று - சந்திரன் அன்று; அகம் - (ஏனென்றால்) இதன்
மத்தியில்; களங்கம் இல்லை - களங்கம் காணப்படவில்லை; இந்த
இந்து - இந்தச் சந்திரன்; எங்கு நின்று - எங்கிருந்து; எழுந்தது -
வந்ததோ? (தெரியவில்லை)
உரு வெளிப்பாட்டில் இராமனது முகச் சந்திரன் தோன்ற அதனால்
உண்டான துயரத்தைச் சீதை வெளிப்படுத்துகிறாள். அவள்
முகச்சந்திரனைப் பார்த்து இது நஞ்சு பொழிந்ததனாலும் நடுவிலே
களங்கத்தைப் பெறவில்லை ஆதலாலும் இது நேற்றிரவு தோன்றிய
சந்திரன் அன்று; இந்தச் சந்திரன் இரவு அல்லாத இப்போது எவ்வாறு
தோன்றியதோ என்று வருந்துகின்றாள். 51
