கார்முகப் படலம் - 793

bookmark

சீதையின் நிலை (793-794)

காதல் நோயால் சீதை உள்ளம் நைந்து உருகுதல்
 
793.

இற்று. இவண் இன்னது ஆக. -
   மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று. உயிர் பின்னும் காணும்
   ஆசையால். சிறிது பெற்ற.
சிற்றிடை. பெரிய கொங்கை.
   சேயரிக்கரிய வாள் - கண்.
பொன்-தொடி.- மடந்தைக்கு அப்பால்
   உற்றது புகலலுற்றாம்.
 
இவண்- சனகனது அரச சபையில்;  இற்று -  இந்த நிகழ்ச்சியானது;
இன்னது ஆக  - இப்படி நடக்க; மதியொடும் - சந்திரனோடு; எல்லி
நீங்கப்  பெற்று - இரவு கழிந்து; உயிர் பின்னும் - அந்தக் குமரனை
மறுபடியும்;  காணும் ஆசையால் - காணவேண்டுமென்ற ஆர்வத்தால்;
சிறிது   பெற்ற  -  (தேய்ந்து  வரும்)  உயிரைச்  சிறிது  பெற்றுள்ள;
சிற்றிடைப்  பெரிய  கொங்கை  -  சிறுத்த  இடையையும்  பெருத்த
தனங்களையும்;  சேய்  அரிக்  கரிய  - செவ்வழி படர்ந்த கரியவாய;
வாள்கண் - ஒளிமிக்க கண்களையும்; பொன்தொடி -  பொன்னாலாகிய
வளைக்கைகளையும்;  மடந்தைக்கு  - அணிந்த சீதைக்கு;  அப்பால் -
(கன்னி  மாடமாகிய)  அந்த  இடத்தில்; உற்றது - நேர்ந்ததை; புகலல்
உற்றாம் - (இனி) கூறத் தொடங்குவோம்.

முன்பே   சீதை வருந்திக் கொண்டிருக்க வேதனைக்குக் காரணமான
சந்திரனும்  இரவும்  நீங்க  மீண்டும்  இராமனைக்   காணலாம்  என்ற
ஆசை   உண்டாகிறது.  அதனால்  சிறிது  உயிர்  தங்கிய    சீதைக்கு
நேர்ந்ததைக்   கம்பர்   கூறத்தொடங்குகின்றார்.  சீதை    இராமனைத்
தன்னுயிர் என்றே கருதினாலாதலின் ‘உயிர்’ என்றார்.             44