களப்பிரர்கள்
நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.
