கடிமணப் படலம் - 1320

bookmark

மிதிலை நகர மகளிர் செயல் (1320-1321)

1320.    

சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு. பொன். தூசு. வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார்கொலோ?
தெரிந்திலம். திருநகர் மகளிர் செய்கையே!
 
மலர் மழை  பொழிந்தனர்  சுண்ணம்  தூவினர்- (அந் நகரத்து
மகளிர் எல்லோரும்)  (இராம பிரானின் மீது)  பூ  மழை  பொழிந்தனர்;
நறுமணப் பொடிகளைத் தூவினர்;விரிந்து ஒளிர் காசு. பொன். தூசு
வீசினர் - ஒளி பரவி  மிளிர்கின்ற  இரத்தினங்களையும் பொன்னையும்.
ஆடைகளையும்  (யாவர்க்கும்  மகிழ்ச்சி  மிகுதியால்)  அள்ளி  வீசினர்;
பரிந்தனர். அழகினைப் பருகினார் கொலோ? - (இதற்குக்  காரணம்)
இராமபிரானது  பேரழகை  விரும்பிக்  குடித்தார்கள் போலும்!; திருநகர்
மகளிர் செய்கை தெரிந்திலம்  - அழகு மிகும்  அந்நகரத்து  மகளிர்
செயல்கட்கு   (இதனை   விட  வேறு  காரணம்   எதுவும்)   எமக்குத்
தெரியவில்லை.

இராமனது  பேரழகுப்   பெருங்காட்சி   கண்டு  பிறர்க்கு  மணியும்
பொன்னும் ஆடையுமாக அள்ளிக் கொடுத்தனர் என்க.             75