ஆற்றுப் படலம் - 20

bookmark

மழைவெள்ளம் கடலணை கண்ட கவிவெள்ளம் ஒத்தமை

வானரக் கூட்டம்: வெள்ளம்
 
20.

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீக்கம் - அந் நீத்தமே.
 
மலை   எடுத்து  - மலைகளைப் பெயர்த்துக் கொண்டும்; மரங்கள்
பறித்து - மரங்களை வேருடன் பறித்துக் கொண்டும்; மாடு-பக்கங்களில்
உள்ள;   இலை  முதல்  பொருள்-இலை  முதலிய  பொருள்களாகிய;
யாவையும் ஏந்தலான்-எல்லாவற்றையும் ஏந்தி வருவதால்; அலை கடல்
தலை-அலைகளையுடைய   கடலிடத்தே; அன்று-இராமபிரான் கடலைக்
கடக்க  நேர்ந்த அந்தக்  காலத்தில்; அணை வேண்டிய- அணை கட்ட
விரும்பிய:  நிலையுடைக்  கவி நீத்தம்- (இராமபிரான் திருப்பணியிலே)
நிலைபேறுடைய   வானரப்    பெருங்கூட்டத்தைப்   போலவே;  அந்
நீத்தமே- அந்தச் சரயுவின் வெள்ளம் (விளங்கியது)

தலை ஏழாம்   வேற்றுமைப்   பொருளில்   வந்தது.   வேண்டுதல்;
விரும்புதல்.

அணை   வேண்டுதல் என்பது குரங்குச் சேனைக்குச் செல்லும்போது
அணை    கட்ட    விரும்பியதையும்,    ஆற்று     வெள்ளத்துக்குச்
செல்லும்போது  அணை  கட்ட  வேண்டிய நிலையையும்   பொருத்திக்
காண்க.   இலை   முதல்   பொருள்;  இலை,  முதலானவை   ஆற்று
வெள்ளத்தில் ஈர்த்து வரப்படுபவன, குரங்குகளுக்கு உணவாவன.     9