ஆரியதரிசனம்

ஆரியதரிசனம்

bookmark


ஓர் கனவு 

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - ஆதி 

கனவென்ன கனவே - என்றன் 
கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன) 

கானகங் கண்டேன் - அடர் 
கானகங் கண்டேன் - உச்சி 
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன) 

பொற்றிருக் குன்றம் - அங்கொர் 
பொற்றிருக் குன்றம் - அதைச் 
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன) 

புத்த தரிசனம் 

குன்றத்தின் மீதே - அந்தக் 
குன்றத்தின் மீதே - தனி 
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன) 

பொன்மரத் தின்கீழ் - அந்தப் 
பொன்மரத் தின்கீழ் - வெறுஞ் 
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன) 

புத்த பகவன் - எங்கள் 
புத்த பகவன் - அவன் 
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன) 

காந்தியைப் பார்த்தேன் - அவன் 
காந்தியைப் பார்த்தேன் - உபசாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன) 

ஈதுநல் விந்தை! - என்னே! 
ஈதுநல் விந்தை! - புத்தன் 
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன) 

பாய்ந்ததங் கொளியே; - பின்னும் 
பாய்ந்ததங் கொளியே; - அருள் 
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன) 

கிருஷ்ணார்ஜுன தரிசனம் 

குன்றத்தின் மீதே - அந்தக் 
குன்றத்தின் மீதே - தனி 
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன) 

தேரின்முன் பாகன் - மணித் 
தேரின்முன் பாகன் - அவன் 
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன) 

ஓமென்ற மொழியும் - அவன் 
ஓமென்ற மொழியும் - நீலக் 
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன) 

அருள் பொங்கும் விழியும் - தெய்வ 
அருள் பொங்கும் விழியும் - காணில் 
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந்த் திகிரியும் (கன) 

கண்ணனைக் கண்டேன் - எங்கள் 
கண்ணனைக் கண்டேன் - மணி 
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன) 

சேனைகள் தோன்றும் - வெள்ளச் 
சேனைகள் தோன்றும் - பரி 
யானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன) 

கண்ணன்நற் றேரில் - நீலக் 
கண்ணன்நற் றேரில் - மிக 
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன) 

விசையன்கொ லிவனே! - வ'றல் 
விசையன்கொ லிவனே! - நனி 
இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை) 

வீரிய வடிவம்! - என்ன 
வீரிய வடிவம்! - இந்த 
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை) 

பெற்றதன் பேறே - செவி 
பெற்றதன் பேறே - அந்தக் 
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற) 

"வெற்றியை வேண்டேன்; - ஜய 
வெற்றியை வேண்டேன்! - உயிர் 
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற) 

சுற்றங் கொல்வேனோ? - என்றன் 
சுற்றங் கொல்வேனோ? - கிளை 
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?" (பெற்ற) 

மிஞ்சிய அருளால் - மித 
மிஞ்சிய அருளால் - அந்த 
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன) 

இம்மொழி கேட்டான் - கண்ணன் 
இம்மொழி கேட்டான் - ஐயன் 
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன) 

வில்லினை யெடடா! கையிற் 
வில்லினை யெடடா - அந்தப் 
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை) 

வாடி நில்லாதே; - மனம் 
வாடி நில்லாதே; - வெறும் 
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை) 

ஒன்றுள துண்மை - என்றும் 
ஒன்றுள துண்மை - அதைக் 
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை) 

துன்பமு மில்லை - கொடுந் 
துன்பமு மில்லை - அதில் 
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை) 

படைகளுந் தீண்டா - அதைப் 
படைகளுந் தீண்டா - அனல் 
சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை) 

செய்தலுன் கடனே - அறஞ் 
செய்தலுன் கடனே - அதில் 
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)