சூரியதரிசனம்

சூரியதரிசனம்

bookmark


சுருதி யின்கண் முனிவரும் பின்னே 
  தூமொ ழிப்புல வோர்பலர் தாமும் 
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும் 
  பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; 
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே! 
  பானுவே! பொன்செய் பேரொளித் திரளே! 
கருதி நின்னை வணங்கிட வந்தேன்; 
  கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 

வேதம் பாடிய சோதியைக் கண்டு 
  வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்; 
நாத வார்கட லின்னொலி யோடு 
  நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்; 
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே 
  கடுகியோடும் கதிரினம் பாடி 
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன் 
  அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.