அகலிகைப் படலம் - 554

bookmark

இந்திரன் அஞ்சிப் பூனையாய்ப் போதல்

554.

‘சரம் தரு சாபம் அல்லால்
   தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த
   வருதலும். வெருவி. மாயா.
நிரந்தரம் உலகில் நிற்கும்
   நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி. ஆங்கு ஓர்
   பூசை ஆய்ப் போகலுற்றான்.
 
சரம்   தரு  சாபம்  அல்லால்  -  (தடுக்கக்கூடிய)   அம்புகளை
தொடுக்கின்ற   வில்லின்தொழிலால்  அல்லாமல்;  தடுப்ப  அரும்  -
யாராலும்   தடுக்க  முடியாது; சாபம் வல்ல - சாபத்தைக் கொடுக்கவும்
அருளிக்  கூறவும்  வல்ல; வரம் தரு முனிவன் - வரங்களை எல்லாம்
கொடுக்க  வல்ல  கௌதமன்;  எய்த  வருதலும்  -  ஆச்சிரமத்திற்கு
அருகில்  வந்த   அளவில்;  நிரந்தரம்  உலகில்  -  எக்காலத்திலும்
நிலவுலகில்;   மாயா  நிற்கும்  -  அழியாமல்  நிலைத்திருக்கக்கூடிய;
நெடும்பழி   பூண்டாள்  -  பெரும்பழிச்  செயலைச்  செய்தவளாகிய
அகலிகை;  வெருவி  நின்றாள்  -  அச்சத்தால்  மனம்  பதறி நின்று
விட்டாள்;  புரந்தரன்  நடுங்கி  - இந்திரன் (செய்யத்தகாத செயலைச்
செய்ததனால்   உண்டான   அச்சத்தால்)  மனமும்  உடம்பும்  நடுங்க;
ஆங்குப்  போகல்  உற்றான்  -  அந்த  இடத்திலிருந்து  வெளியே
செல்லத் தொடங்கினான்.  

அகலிகை.  இந்திரன்  செயல்கள்: தன் கணவன் திரும்பி வந்ததை
அறிந்த அகலிகை தன் செயலுக்கு வருந்தி அம் முனிவன்முன் நடுங்கி
நின்றாள்.  இந்திரனோ.  ஒரு  பூனையின் வடிவைத் தாங்கி வெளியே
செல்லத்  தொடங்கினான். நெடும்பழி பூண்டாள்: தன் அறியாமையால்
பிற  ஆடவனோடு  கூடியதால்  முழுமையாகவே  இவள்  மேல் பழி
சுமத்த  இயலாது.  ஆனால்  தன்னைச்  சேர்ந்துள்ளவன் இந்திரனே
என்று  தெரிந்தும் அத் தீய செயலை விலக்க வேண்டுமென்ற அறிவுத்
தெளிவு  இவளிடம்  உண்டாகாததே இவள் மேல் உள்ள குறையாகும்.
நயம்: சரந்தரு; சாபம்: வில்.  தடுப்பருஞ்  சாபம்:  சபித்தல் - தடுக்கக்  
கூடிய   வில்லம்பை   விடத்   தடுக்க  முடியாத  சொல்லம்பு  மிகக்
கொடியது என்பது விளங்கும்.                               20