அகலிகைப் படலம் - 547

bookmark

அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டை
மூவரும் காணுதல்

மிதிலை   நகரின்  மதிற்புறத்தே  அகலிகை   கல்லாய்க்   கிடந்த
மேட்டைக் காணல்
 
547.

இனைய நாட்டினில் இனிது சென்று.
   இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின்
   புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி
   மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர்
   வெள்ளிடைக் கண்டார்.  
 
இனைய  நாட்டினில் -  இத்தகைய  மிதிலை  நாட்டிலே;  இனிது
சென்று  -  இனிய  மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை -
மதில்களால்      சூழப்பட்டுள்ள     மிதிலை    நகரை;    புனையும்
அலங்கரிக்கின்ற;   நீள்கொடிப்    புரிசையின்      -    உயர்ந்த
கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே
வந்து  தங்கினார்கள்;  மனையின்  மாட்சியை  -  (அவ்வாறு  தங்கி)
இல்லறத்திற்குச்    சிறப்பான    கற்பினை;    அழித்து    இழி   -
அழியச்செய்ததால்   இழிவை   அடைந்தன;   மாதவப்   பன்னி  -
பெருந்தவத்தனான     கௌதமரின்    மனைவியான    அகலிகையின்;
கனையும்  மேடு  உயர்  - (சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து
தோன்றுகின்ற;  கருங்கல்   -   கருங்கல்லாகக்  (கிடப்பதனை);  ஓர்
வெள்ளிடைக் - ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள்.   

விசுவாமித்திரன்  முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே
தங்கினர்.  அப்பொழுது  கௌதம  முனிவன் மனைவியான  அகலிகை
அம்முனிவனின்    சாபத்தால்   கல்லாய்க்    கிடக்கும்    இடத்தைப்
பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும்  வடசொல்  பன்னி என
மருவியது.                                                13