படைத் தலைவர் வதைப் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
படைத் தலைவர் வதைப் படலம்
படைத்தலைவர் போரிட இராவணனிடம் இசைவு வேண்டல்
மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் விடை பெற்றபோது, தூதுவர் அவர்களது செய்கையை இராவணனுக்கு எடுத்துரைத்தல்
தூதுவர் உரை கேட்ட இராவணன் இருவரையும் பற்றுமாறு கூற, கிங்கரர் அவர்களைப் பிடித்தல்
அவ் இருவரையும் மூக்கறுக்க இராவணன் கட்டளையிட, மாலி அதனைத் தடுத்துக் கூறுதல்
இராவணன் சினம் தணிய, மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்
இராவணன் அவ்விருவருடன் பெருஞ் சேனையை அனுப்புதல்
துணையாக உடன் சென்ற பெரு வீரர்கள்
சேனைகள் திரண்டு சென்ற காட்சி
வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்
வானரரும் அரக்கரும் கைகலந்து பொருதல்
வெங் கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக் குல வீரச்
சிங்கம் அன்ன போர் வீரரில், தலைவராய்த் தெரிந்தார்,
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்;
பொங்கு வெஞ் செருத் தேவரும் நடுக்குறப் பொருதார்.
அரக்கர் சேனையின் அழிவும், இரத்த வெள்ளம் பரத்தலும்
இன்ன காலையின், ஈர்-ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர் தம் சேனையில், வீரன்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான்.
உப்புடைக் கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில; ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தெரிந்தது; மீன் குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்துஇனம் குன்றியின் தோன்ற.
தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த;
ஒத்து வேற்று உருத் தெரியல, உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகு தரளமும், வளை சொரி முத்தும்.
சூரியன் உதித்தல்
அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
கதிரவன், செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என, உதித்தான்.
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன்
துரக்க, வெஞ் சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர
படுகளக் காட்சி
நிலை கொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின் தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன - சோரி
அலை கொள் வேலையும், அரும் பிணக் குன்றமும் அணவி.
நிலம் தவாத செந்நீரிடை, நிணக் கொழுஞ் சேற்றில்,
புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெரு வனம், கதிரவன் கரத்தால்,
மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம்.
தேரும் யானையும் புரவியும் விரவின, - தேவர்
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெங் காலத்துக் கால் பொர, பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன - கிடந்தன பரந்து.
போர்க்களம் போந்த அரக்கியரின் நிலை
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர், எரி வீழ்
அல்லி சுற்றிய கோதையர், களம் புகுந்து அடைந்தார்,
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்,
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர்.
வணங்கு நுண் இடை, வன முலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்,
குணங்கள் தந்த தம் கணவர்தம் பசுந் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர், பிடித்தே.
சுடரும் வெள் வளைத் தோளி, தன் கொழுநனைத் தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்,
குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள்.
பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
அரிய, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார்.
நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலோர்,
அலங்கல் ஓதியர், - அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன போன்றார்.
சிலவர் - தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால்,
பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார்,
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது, அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம் எனக் கனன்றார்.
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி,
அவசம் எய்திட, மடந்தையர் உருத் தெரிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார்.
மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார்.
அனுமனுக்கும் புகைக்கண்ணனுக்கும் நிகழ்ந்த போர்
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்,
புகைவெங்கணனும் பொருவார்; பொரவே,
மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்.
ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான்.
பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால் -
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான்.
சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான்.
புகைக்கண்ணன் உயிர் இழத்தல்
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
அலையத் திருகிப் பகு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால்.
மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால்.
ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான் -
வெம்பி, களியோடு விளித்து எழு திண்
கம்பக் கரி, உண்டை கடாய் எனவே.
கார் ஓடும் நிறக் கத நாகம் அனான்,
தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே,
வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.
சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
காலம் என உன்னு கருத்தினனாய்,
ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால்.
மாபக்கனை அங்கதன் பிளந்து அழித்தல்
உளம்தான் நினையாதமுன், உய்த்து, உகவாக்
கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான் - உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான், வலி நன்று என, - அங்கதனே.
மாலி-நீலன் போர்
மா மாலியும் நீலனும், வானவர்தம்
கோமானொடு தானவர் கோன் இகலே
ஆமாறு, மலைந்தனர்; அன்று, இமையோர்
பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால்.
கல் ஒன்று கடாவிய காலை, அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
நில்! என்று இடை சென்று, நெருக்கினனால்.
இடையே வந்து குமுதன் எறிந்த குன்றால் மாலியின் தேர் பொடியாதல்
அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால்.
மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்
தோள் ஆசு அற, வாளி துரந்தனனால் -
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.
கையற்ற மாலியுடன் பொருதல் தகாது என இலக்குவன் அப்பால் போதல்
மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை, சலியா,
என் போலியர் போர் எனின், நன்று; இது ஓர்
புன் போர் என, நின்று அயல் போயினனால்.
இராமனிடம் சென்ற இலக்குவனை வானர வீரர்கள் புகழ்தல்
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
பேர் வீரனை, வாசி பிடித்தவனை,
யார், வீரதை இன்ன செய்தார்கள்? எனா,
போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால்.
வேள்விப்பகைஞனை இலக்குவன் அழித்தல்
வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
வாழ்வு இத்தனை என்று, அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால்.
மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
எல்லுற்று உயர் வேள்வி இரும்பகைஞன்
வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும்.
சூரியன் பகைஞனைச் சுக்கிரீவன் கொல்லுதல்
தன் தாதையை முன்பு தடுத்து, ஒரு நாள்,
வென்றானை, விலங்கலின் மேனியனை,
பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
கொன்றான் - கவியின் குலம் ஆளுடையான்.
இடபன் - வச்சிரத்துஎயிற்றன் போர்
இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
கடவும் கதழ் தேர், கடவ ஆளினொடும்
பட, - அங்கு ஒரு குன்று படர்த்தினனால்.
திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
தண்டோ டும் இழிந்து, தலத்தினன் ஆய்,
உண்டோ உயிர்? என்ன உருத்து, உருமோடு
எண் தோளனும் உட்கிட, எற்றினனால்.
இடபன் அடியுண்டு அயர, அனுமன் துணையாக வந்து பொருதல்
அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
இடையுண்ட மலைக் குவடு இற்றது போல்
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் -
நெடியன், குறியன் எனும் நீர்மையினான்.
கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை, நெடும் புகழ்ப் பைங் கழலான்
புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற.
வச்சிரத்துஎயிற்றனை அனுமன் கொல்லுதல்
எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால்.
பிசாசன் செய்த பெரும் போர்
காத்து ஓர் மரம் வீசுறு கைக் கதழ்வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால்.
கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினனோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம் -
போர் மேலினன், வாசி எனும் பொறியான்.
நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
ஆறாயிர வானவரும், அறிவின்
தேறா வகை நின்று, திரிந்துளதால் -
பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே.
கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
மண்ணில் திரியாத வயப் பரியே.
மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
பூப் புண் தர, -ஆவி புறத்து அகல,
கோப்புண்டன, வானர வெங் குழுவே.
நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்,
சீறும் கவி சேனை சிதைக்கும்? எனா,
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்.
இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல்
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்.
குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
தலை அற்று உகவும், தரை உற்றிலனால் -
இலையப் பரி மேல் கொள் இருக்கையினான்.
அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்!
இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர் என்றான்.
மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார்.
மத்த மதக் கரியோடு மணித் தேர்,
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த.
இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார்.
தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே?
ஐய! கேள்: சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவரின் விழுமம் பெற்றோர்,
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர்,
மொய் படைத் தலைவர் என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான்.
இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
பின்னரும் செல்லும் என்று ஒழியப் பேசினான்;
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார்.
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
விடியலுற்றது நம் பெருந் துயர் என வியந்தார்.
வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார்.
தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால்.
அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்,
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
இப் போர் தருக! என்ற இலக்குவன்மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால்.
சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால்.
முடிவுற்றனன், மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால்.
பொர நின்ற பணைப் புய வன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால்.
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால்.
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் -
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே.
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய்
வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால்,
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால்.