நாகபாசப் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நாகபாசப் படலம்
குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
தழுவித் தலைப் பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத் தொழில் யாதுகொல்? என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான்.
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு-
பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என்கொல்? என்றான்.
கேட்டான், இடை உற்றது என்? என்று, கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்.
ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான்.
கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
உண்டாயது என், இவ்வுழி? என்றலும், உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்-வீர! என்றான்.
சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
எல்லாரும் இறந்தனரோ! என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன்.
ஆர் கொன்றவர்? என்றலுமே, அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால் என, உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான்.
கொன்றார் அவரோ? "கொலை சூழ்க!" என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது என்னா,
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான்.
அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கல் பொரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ!
என், இன்று நினைந்தும், இயம்பியும், எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்; வாழ்வும் வேண்டேன்.
வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனை படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை!
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன் தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க என்றான்.
பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன்.
மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
இருந்தேன் எனின், நான் அவ் இராவணி அல்லென் என்றான்.
ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலர் மேல்
மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி, இவ் இன்னலின் சிந்தை செய்தேன்.
என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன் -வானை வென்றான்.
வயிரந் தெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம் ஈதால்.
தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வன்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ.
பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான்.
நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும்
தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர்.
பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல்நாள்,
பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும்.
ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன் தன்
சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன் என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா!
செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
யது;-கைத் திசை யானையை ஓட்டியது என்னலாமே?-
மதுகைத் தடந்தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா!
அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன் என்ன, நடந்தனன் -பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான்.
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான், அது நாற்பது வெள்ளம் என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்.
தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம,
நாமக் கடற் பல் இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப.
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத,
தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி இல்லான்.
நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்-
பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி,
அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன், வரும் என விரும்பும் சிந்தையான்.
யார், இவன் வருபவன்? இயம்புவாய்! என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர் என்றான்.
எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்த்தியால், தெளியும் சிந்தையால்.
மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
போர் செய்த குருதியால்-புகழின் பூணினாய்!
பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால்.
இனி அவை மறையுமோ, இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?
என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும்,
நன்று என மொழிதலும், நணுகினான் அரோ-
வன் திறல் மாருதி, இலங்கைக் கோ மகன்
சென்றனன் இளவல்மேல் என்னும் சிந்தையான்.
கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ.
அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே.
இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன-மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று எனா,
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்-
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே.
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி,
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி,
நத்து ஒலி, முரசு ஒலி, நடுக்கலால், தலை-
பொத்தினர் செவிகளை-புரந்தராதியர்.
எற்றுமின், பற்றுமின், எறிமின், எய்ம்மின் என்று,
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்,
முற்றுறு கடை யுகத்து இடியின் மும் மடி
பெற்றன, பிறந்தன, சிலையின் பேர் ஒலி.
கல் பட, மரம் பட, கால வேல் பட,
வில் படு கணை பட, வீழும் வீரர்தம்
எல் படும் உடல் பட, இரண்டு சேனையும்
பிற்பட, நெடு நிலம் பிளந்து பேருமால்.
எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன,
அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள, தலை இல, களத்தின் ஆடுவ.
வெட்டிய தலையன, நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய, குரங்கின் மொய் உடல்-
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்தபின், நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ.
பிடித்தன நிருதரை, பெரிய தோள்களை
ஒடித்தன, கால் விசைத்து உதைத்த, உந்தின,
கடித்தன கழுத்து அற, கைகளால் எடுத்து
அடித்தன, அரைத்தன, ஆர்த்த-வானரம்.
வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
தாள்களைத் துணித்தனர், தலையைத் தள்ளினர்,
தோள்களைத் துணித்தனர், உடலைத் துண்ட வன்
போழ்களின் புரட்டினர், நிருதர் பொங்கினார்.
மரங்களின், அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
கரங்களை, கழல்களை, ஒடியக் காதின-
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே.
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன,
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன,
உடர்த்தலை வைர வேல் உருவ, உற்றவர்
மிடற்றினைக் கடித்து, உடன் விளிந்து போவன.
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
தொடர்ந்தன, மழை பொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன, மூளைகள் இனிதின் உண்டன,
கடந்தன, பசித் தழல்-கரடி, காதுவ.
கொலை மதக் கரியன, குதிரை மேலன,
வல மணித் தேரன, ஆளின் மேலன,
சிலைகளின் குடுமிய, சிரத்தின் மேலன,-
மலைகளின் பெரியன குரங்கு-வாவுவ.
தண்டு கொண்டு அரக்கர் தாக்க, சாய்ந்து உகு நிலைய, சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி,
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு இனப் பிணத்தின் குப்பை
மண்டு வெங் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ.
பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனி வேல் என்றும்,
சின வென்றி மதமா என்றும், தேர் என்றும், தெரிந்தது இல்லை-
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை.
பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
எங்கு உள, உயிர்? என்று எண்ணி, இணைக் கையால் கிளைத்தது என்ப-
அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறுபட்டு அழிந்த தானை.
தாக்கிய திசைகள்தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர், முனிவர், என்னை? இதற்கு அது தோற்கும் என்றார்.
எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர், முகங்கள் தாங்கி, தனித் தனி தலைவர் தள்ளி;
படுத்தனர் அரக்கர், வேலை பட்டதும்; படவும், பாரார்,
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர்.
சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக் கையான்.
காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்; இரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்றுகின்ற அருஞ் சமம் இதுவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி? என் பதம் இழந்தேன் என்னா,
கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெங் கதக் குமுதன் கொன்றான்.
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற, மரங்களில்; தெரியச் செப்பும்
குறியுடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே-கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட, இடவன் அன்று இடந்திலாத.
வாம் பரி, மத மா, மான் தேர், வாள் எயிற்று அரக்கர் மானப்,
பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர்; பயம் இன்று, இன்றே;
தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார்.
பொரும் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன் தேரும்,
இருங் களி யானை ஆன மகரமும், இரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
கருங் கடல் கலக்கும் மத்தின், பனசனும் கலக்கிப் புக்கான்.
மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து, வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்; காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர் பெற்றான்.
பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின் குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று,
இரிந்தன கவியும் கூடி எடுத்தன; எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே.
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர, அடல் வலித்
தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை, செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல் உலகம் யாவையும் நடுக்கினான்.
சிங்கஏறு, கடல்போல் முழங்கி, நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு வெள்க, வெங் கணைகள் சிந்தினான்.
சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன; எழுந்து சேணிடை இழிந்தபோல்,
வெற்றி வெங் கணை படப் பட, தலைகள் விண்ணினூடு திசைமீது போய்,
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால்.
சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல, ஊடு சென்ற, பல வாளியே.
முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன, தடிந்து போய்,
கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய, எற்ற, அற்றன எழுந்து மேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி, உடன் வீழுமால்.
அற்ற பைந் தலை அரிந்து சென்றன அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்,
உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால்.
விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய, மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின் உன்னுமேல்-சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன் விடும் கொடும் பகழி பாயவே.
மொய் எடுத்த கணை மாரியால், இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது யாதும் ஒன்று செவி உற்றிலார்;
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால்,
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு,-தேவர்கள்-கலங்கினார்.
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு, கணை மாறினான், விடுதல் இன்மையாய்;
கண்ட காலையில், விலங்கினான் இரவி காதல், காதுவது ஓர் காதலால்,
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான்.
உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயிர் ஒல்க, வெல் செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர, வீசினான்; நிருதர் கூசினார்.
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட, ஒரு மரா மரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, வலி நன்று, நன்று! என வியந்து, வெங் கணை தெரிந்து, அவன்
நெற்றியின் தலை இரண்டு, மார்பிடை ஓர் அஞ்சு, நஞ்சு என நிறுத்தினான்;
பற்றி வந்த மரம் வேறு வேறு உற நொறுக்கி, நுண் பொடி பரப்பினான்.
அக் கணத்து, அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்;
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமுபோல் உறா,
இக் கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக் கிரி, சொரிந்த வாளிகளின், ஊழ் இலாத சிறு பூழியாய்.
நில் அடா! சிறிது நில், அடா! உனை நினைந்து வந்தனென், முனைக்கு நான்;
வில் எடாமை நினது ஆண்மை பேசி, உயிரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா, நெடு மரங்களோ, வரு கருத்தினேன் வலி கடக்கவோ?
சொல் அடா! என இயம்பினான், இகல் அரக்கன், ஐயன், இவை சொல்லினான்.
வில் எடுக்க உரியார்கள், வெய்ய சில வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது இன்று நாளையிடை காணலாம்;
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில போர் எடுத்து, எதிர் புகுந்துளோம்.
என்னொடே பொருதியோ? அது என்று எனின், இலக்குவப் பெயரின் எம்பிரான்-
தன்னொடே பொருதியோ? சொல்; நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ? உரைத்தது மறுக்கிலோம் என, வழங்கினான்-
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொருப் படா உயர் புயத்தினான்.
எங்கு நின்றனன் இலக்குவப் பெயர் அவ் ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன் தனை மலைந்து கொன்று, முனிவு ஆற வந்தனென்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு ஒடுக்கும் வெங் கணை தொடுக்கினே?
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக, யானும், இகல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென்; இது திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச் சொலும்;
போரும், இன்று ஒரு பகற்கணே பொருது, வெல்வென்; வென்று அலது போகலேன்.
என்று, வெம்பகழி, ஏழு நூறும், இருநூறும், வெஞ் சிலைகொடு ஏவினான்;
குன்று நின்றனைய வீர மாருதிதன் மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள் எயிறு தின்று சீறி, ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து, அவனை எய்தி, நொய்தின் இது கூறினான்:
தும்பி என்று உலகின் உள்ள யாவை, அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள்,
வெம்பு வெஞ் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான், வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல்,
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது; கா அடா! சிலை வல் ஆண்மையால்.
செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல விட்ட குன்று, திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன் தன் மார்பின், நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது ஒடிந்து இடிந்து, திசை போயதால்;
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற, நீறு பட்டது நிகர்த்ததால்.
விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ் சினம் திருகி, வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ, ஆயிரம் சரம் அழுத்தினான்.
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ, ஆடகக்
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்கநின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர வாரி சோர வரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெங் கண் அடல் நீலன் வந்து, இடை நெருக்கினான்.
நீலன், நின்றது ஒரு நீல மால் வரை நெடுந் தடக் கையின் இடந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்,
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்பு கொடு கல்லினான், நெடிய வில்லினான்.
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட, வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக, மேருவினும் மும் மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங் குருதி ஆறு பாய, அனல் அஞ்சு வாய்,
நாக வெங் கண் நகு, வாளி பாய்தொறும் நடுங்கினான், மலை பிடுங்கினான்.
மேரு, மேரு என, அல்ல, அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம்,
மார்பின்மேலும் உயர் தோளின்மேலும் உற, வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கை நிற்க? எதிர் செல்லுமே? கடிது செல்லினும்,
பேருமே? கொடிய வாளியால் முறி பெறுக்கலாவகை நுறுக்கினான்.
நெற்றிமேலும், உயர் தோளின்மேலும், நெடு மார்பின்மேலும், நிமிர் தாளினும்,
புற்றினூடு நுழை நாகம் அன்ன, புகை வேக வாளிகள் புகப் புக,
தெற்றி வாள் எயிறு தின்று, கைத்துணை பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற, மயங்கினான், நிலம் முயங்கினான்.
மற்றை வீரர்கள் தம் மார்பின் மேலும், உயர் தோளின்மேலும், மழை மாரிபோல்,
கொற்ற வெங் கணை உலக்க, எய்தவை குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர் உள்ள எங்கணும் இரிந்த; அப்
பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள் எரி பிறந்த கண்ணன், இவை பேசினான்:
பிழைத்தது, கொள்கை போத; பெரும் படைத் தலைவர் யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று அன்றே,
அழைத்து இவன் தன்னை, யானே ஆர் உயிர் கொளப்படாதே?
இழைத்தது பழுதே அன்றோ?-வீடண! என்னச் சொன்னான்.
ஐய! ஈது அன்னதேயால்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர்; எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
செய்திலர் இவனை ஒன்றும்; நீ இது தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ , வேறுஇவ் உலகினுக்கு உயிரோடு? என்றான்.
என்பது சொல்லக் கேட்ட, இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, இவன்கொலாம், பரதன் முன்னோன்-
தன் பெருந் தம்பி? என்றான்; ஆம் எனச் சாரன் சொன்னான்.
தீயவன் இளவல் தன்மேல் செல்வதன் முன்னம், செல்க! என்று
ஏயினர் ஒருவர் இன்றி, இராக்கதத் தலைவர், எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை, நாங்கள் காண;
போய் இனி உய்வது எங்கே? என்று, எரி விழித்துப் புக்கார்.
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர், கொடித் திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி,
மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி.
அதிர்ந்தன, உலகம் ஏழும்; அனற் பொறி, அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின, உதிர நீத்தம்;
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது, கொடிய வெம் போர்.
விட்டனன், விசிகம் வேகம் விடாதன, வீரன்; மார்பில்
பட்டன; உலகம் எங்கும் பரந்தன; பதாகைக் காட்டைச்
சுட்டன; துரக ராசி துணித்தன; பனைக் கைம்மாவை
அட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன, அனந்தம் அம்மா!
உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்றவிண்ணோர்,
கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்,
விலக்க அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி,
இலக்குவன்சிலை கொடேகொல், எழு மழை பயின்றது! என்றார்.
ஓளி ஒண் கணைகள் தோறும் உந்திய வேழம், ஒற்றை
வாளியின் தலைய, பாரில் மறிவன, மலையின் சூழ்ந்த;
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து, ஆர்த்த ஆழித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடு கணைத் தொகையும் அம்மா!
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு, உழலும் பெற்றிச்
சிறையன என்ன நோக்கி, தேவரும் திகைப்ப, தேற்றி,
துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி, வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ.
திறம் தரு கவியின் சேனை, செறி கழல் நிருதன் சீற,
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்,
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன; குருதி ஓடி, மறி கடல் மடுத்திலாத.
கை அற்றார்; காலன் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம் அற்றார்;
மெய் அற்றார்; குடர்கள் சோர, விசை அற்றார்; விளிவும் அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும், வாசியும், மற்றும் அற்றார்;
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி உள்ளார்.
வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
தெற்றின புருவத்தோன், தன் மனம் எனச் செல்லும் தேரான்,
உற்றனன், இளைய கோவை; அனுமனும் உடன் வந்து உற்றான்.
தோளின்மேல் ஆதி, ஐய! என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன் கொலையன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை வந்தன்னார்.
இடித்தன, சிலையின் நாண்கள்; இரிந்தன, திசைகள் இற்று;
வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது, விசும்பு மேன்மேல்;
பொடித்த, இவ் உலகம் எங்கும்; பொழிந்தன, பொறிகள் பொங்கி;
கடித்தன, கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி.
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த;
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த; வேலைக் கலம் எனக் கலங்கிற்று, அண்டம்.
அரி இனம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
எரி கணைப் படலம் மூட, இலர், உளர் என்னும் தன்மை
தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன, திசைகள் எல்லாம்.
என் செய்தார்! என் செய்தார்! என்று இயம்புவார்; இனைய தன்மை
முன் செய்தார் யாவர்? என்பார்; முன் எது? பின் எது? என்பார்;
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்;-
பொன் செய்தார் மவுலிவிண்ணோர்-உணர்ந்திலர், புகுந்தது ஒன்றும்.
நாண் பொரு வரி வில் செங் கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி; வானம்
சேண் பெரிது என்று, சென்ற தேவரும், இருவர் செய்கை
காண்பு அரிது என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ!
ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன், எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான், ஐயன்;
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து, அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான், அண்ணல்.
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்;
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான், கொண்டல்;
மீட்டு, ஒரு கோடி கோடி வெஞ் சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன்.
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து, அரக்கன் எய்தான்;
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து, இளவல் காத்தான்,
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்;
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
கோரையின் தலைய கோடி கொடுங் கணை அரக்கன் கோத்தான்;
கோரையின் தலைய கோடி தொடுத்து, அவை இளவல் கொய்தான்;
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல், பல் கால்;
பாரையின் தலைய கோடி, அரக்கனும், பதைக்க எய்தான்.
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.
வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச் சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்;
முச் சிரப் பகழி கோடி தொடுத்து, அவை தடுத்தான் முன்பன்.
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான், ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன் கொய்தான்.
எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம்மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர்.
வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந் தீ உருமினை உமிழ்வது என்ன,
ஏழ்-இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்.
முற்கொண்டான், அரக்கன் என்னா, முளரி வாள் முகங்கள், தேவர்,
பின் கொண்டார்; இளைய கோவைப் பியல் கொண்டான் பெருந் தோள் நின்றும்
கல்கொண்டு ஆர்கிரியின் நாலும் அருவிபோல், குருதி கண்டார்,
வில்கொண்டான், இவனே! என்னா, வெருக் கொண்டார் முனிவர் எல்லாம்.
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன், சிலைக் கை வாளி
நூறு நூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம் பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான்.
காளமேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின்மேலும், சுடர் விடு கவசம் சூழ,
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளிவாய்தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி.
பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மாப் புரண்ட போதும்,
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு இல சார்ந்த போதும்,
இன்னது என்று அறியான், அன்னான், இனையது ஓர் மாற்றம் சொன்னான்.
அந் நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்; அன்றேல்
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர், நம் பதியின் வந்து, வரி சிலை பிடித்த கல்வி
இந் நரன் தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்? என்றான்.
இந்திரசித்தன் தேர் அழிதல்
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான்,-உயிர் தீர்ந்தாலும்,
ஓய்விடம் இல்லான்-வல்லை, ஓர் இமை ஒடுங்காமுன்னம்,
ஓசை விம்ம, உருத்திரரும் உடல்
கூச, ஆயிர கோடி கொலைக் கணை
வீசி, விண்ணை வெளி இலது ஆக்கினான்.
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி, இராவணன்
புத்திரற்கும், ஓர் ஆயிரம் போக்கினான்.
காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்;
தீயவன் பெருஞ் சேவகன் சென்னிமேல்
தூய வெங் கணை நூறு உடன் தூண்டினான்.
உற்ற போதினும், யாதும் ஒன்று உற்றிலன்,
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற, வெங் கணை நூறு முடுக்கினான்.
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர,
தேறல் ஆம் துணையும், சிலை ஊன்றியே
ஆறி நின்றனன்-ஆற்றலில் தோற்றிலான்.
சிதைய, ஆயிரம் பாய் பரி சிந்திட-
வதையின் மற்றொரு கூற்று என மாருதி-
உதையினால் அவன் தேரை உருட்டினான்.
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள் இணைமேல் சுடர்த்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான்.
வேறு செய்திலன், வெய்யவன்; வீரனும்,
ஆறு கோடி பகழியின் ஐ-இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான்.
வீசி வீசி, வணங்கினர்;-விண்னவர்-
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்;-நல் நெறி துன்னினார்.
மிக்க வெங் கண் அரக்கர், அவ் வீரனோடு
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்,
புக்கு முந்தினர், போரிடைப் பொன்றுவான்.
காரர்,-காரின் இடிப்பினர், கண்டையின்
தாரர், தாரணியும் விசும்பும் தவழ்
பேரர், பேரி முழக்கு அன்ன பேச்சினார்.
போர்த்த வானம் என இடி போர்த்து எழ,
ஆர்த்த ஓதையும், அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும், விண்ணினைத் தூர்த்தவால்.
கூளி ஆர்த்தன; குஞ்சரம் ஆர்த்தன;
வாளி ஆர்த்தன; தேர், இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால், பிணம் துன்னலால்.
இந்திரன் தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி, திசை திசை;
அந்திவண்ணனும் அம்பின் அகற்றினான்.
எற்றுகின்றன, எய்த, எறிந்தன,
அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன் தலை,
ஒற்றை வெங் கணையொடும் உருண்டவால்.
திடர் கிடந்தன; சிந்தின, தேர்த் திரள்
படர் கிடந்தன, பல் படைக் கையினர்-
கடர் கிடந்தன போன்ற களத்தினே.
கண்டநாணும், கழலும், கவசமும்,
சண்ட மாருதம் வீச, தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என, வீழ்ந்தவால்.
கரக்க நூறி, எதிர் பொரு கண்டகர்
சிரக் கொடுங் குவைக் குன்று திரட்டினான்-
இரக்கம் எய்தி, வெங் காலனும் எஞ்சவே.
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்-
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே.
தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே.
பூவும் நீரும் புனை தளிரும் என,
தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்-
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே.
இரதம் ஆயிரம், ஏ எனும் மாத்திரை,
சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே.
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென,
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தெவ் அடங்கும் அவ் வலியவர் தேறினார்.
ஊறினார் வந்து, இளவலை ஒன்றினார்;
மாறு மாறு, மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்.
புகட, உற்ற பொறுத்தன, போவன,
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம்.
காலின் வந்த அரக்கனை; கா; இது
போலும் உன் உயிர் உண்பது, புக்கு எனா,
மேல் நிமிர்ந்து, நெருப்பு உக வீசினான்.
சீர் அழித்தவன் ஆம் என, தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து, ஓர் இமைப்பிடைச் சென்றதால்.
சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால்.
எழுந்து, மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்,-
கழிந்து போகலை, நில்! என, கைக் கணை
பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான்.
தந்து போக! எனச் சாற்றலுற்றான் தனை,
வந்து, மற்றைய வானர வீரரும்,
முந்து போர்க்கு முறை முறை முற்றினார்.
சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்
கரமும், ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார்.
வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்
நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான் -
மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான்.
தானையும், பரியும், படும் தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா,
போன வென்றியன், தீ எனப் பொங்கினான்.
காத்து நின்ற இருவரைக் கண்டனன்-
ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால்.
கார் செலா; இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது;-பினத்தின் பிறக்கமே.
ஒன்று வாள் முகம் நோக்கி, ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி! எனக் கூறினான்.
நீயும், நாற்பது வெள்ள நெடும் படை
மாய, வெங் கணை மாரி வழங்கினை;
ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும் என்று ஓதினார்.
அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்
சிந்தினான், கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த, முறை முறை நூறினான்.
நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்.
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,
எதிரில் நின்ற இராவணி ஈடுற,
வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான்.
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,
அளவு இல் சேனை அவிதர, ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான்.
பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்,
இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார்.
தேடின, தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள் தோறும் பசும் புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார்.
செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்
பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப் புல்லி,
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார்.
மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்
குறிக்கொளும் என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,
நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது நீத்தார்.
வேம், அரைக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல் முன்னம்,
மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய வல்லே
போம் எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து போனார்.
இரை உண்டு துயில், சென்றார், வாங்கிடின், இறப்பம் என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து, உழைப்பதானார்.
காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய அன்பால்
போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார்.
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி,-
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான்.
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,
திவசத்தின் முடித்தும், வெம் போர் எனச் சினம் திருகிச் சென்றார்.
தேரினும் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,
ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்
ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான்.
உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்; புடைத்தலோடும்,
பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக் கொண்டான்.
கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;
கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும் என்று, அச்சம் கொண்டார்,
உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார்.
கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும், நோவும் தீர்ந்தார்,
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம்.
பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார்.
ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
இத்தனை போலும் செய்யும் இகல் எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான்.
நெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும், வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி நின்றான்.
வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம்.
பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன் என்பது, இராவணற்கு இளவல் சொன்னான்.
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான்.
உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன் என்னா,
விழித்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில் சென்றான்.
வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்கொலாம்! என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார்.
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான்.
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-
மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது, ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான்.
அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
பனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும் தொலைத்து, "பட்டான்
இனி" என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான்.
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
"போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம்" என்று,
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான்.
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன், வானில்
போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து, பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான் என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும் கண்ணான்.
பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, எம் பெரும! யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம் என்றான்.
யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது? இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண் என்று,
ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், அமல! சாலச்
சீரிது என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச் சொன்னான்:
ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று, வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது; ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்;
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின் உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று எண்ணி
என், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால் ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம்.
தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை என்றான்.
ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற பண்போடு
ஏய்ந்தது பகர்தி என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான்.
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின் சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப் போழ்தின்.
எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி, இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை? அறம்தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்?
என்று கொண்டு இயம்பி, ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய,
வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால் என்று விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்,-
தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல், தாழ்ந்த அன்பான்.
மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம் தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
வீட்டியது என்னின், பின்னை வீவென் என்று எண்ணும்-வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை அன்னான்.
இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, இது போய்
எத் தன்மை எய்தி முடியும்கொல்? என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,
சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,-
அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,-
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்,-
விசையால் அனுங்க வட மேரு, வையம் ஒளியால் விளங்க, இமையாத்
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க, நிறை கால் வழங்கு சிறையான்,-
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ,
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு, கிளர்வான்,-
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய:
அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர;
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர;
நன் பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து, வருகின்ற செய்கை தெரிய;
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க; வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல் திரு மேனி கண்டு, தொழுவான்.
முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பல கால் நினைந்து, பணிவான்,-
வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன் தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்? வருந்தல்; உடையாய்! வருந்தல் என, இன்ன பன்னி மொழிவான்:
தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
"என் ஒக்கும், இன்ன செயலோ இது?" என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
"தான் அந்தம் இல்லை; பல" என்னும், ஒன்று; "தனி" என்னும், ஒன்று; "தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்" என்னும், ஒன்று; "நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்" என்னும், ஒன்று; மறைநாலும் அந்தம் அறியாது,
"ஆனந்தம்" என்னும்; "அயல்" என்னும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்;
"கேளாத" என்று, "பிற" என்று, சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்,
மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை, வறியோர்;
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
"கொல்" என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயல், ஆரும் யானும் அறியேம்;
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி; அவை எய்தி, என்றும் விளையா,
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி, மனமா;
முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்,
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்னது இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி; பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய்;
கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆதி; கோடல் உரிபோல்,
ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரி சோதி கீற, இருள் போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, இவன் யாவன்? என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும் முன்னர், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான்.
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை?-மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல் அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற-பதகன் துரந்த உரகம்.
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும்.
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால்,
உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம், மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலை நின்ற, தெய்வ நெறியால்.
இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா,
கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா,
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து, முறை நின்ற வீரன் மொழிவான்:
ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய் திறம் இலையால் என்றான்-தேவர்க்கும் தெரிக்க ஒணாதான்.
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித்
தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினை என்னின், எய்த அரியன உளவோ?-ஐய!
கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை;
"உண்டு, இலை" என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி! என்றான்.
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென் என்று உணர்த்தி, மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை எனப் பெயர்ந்து போனான்.
ஆரியன் அவனை நோக்கி, ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், "செய்கை ஊதியம் பிடித்தும்" என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்? என்றான்.
"இறந்தனன், இளவல்" என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, "மீளப்
பிறந்தனர்" என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான்.
அழகிது என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ.
பழிப்பு அறு மேனியாள் பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான்.
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்?
சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், சீற்றச் சேனை
பொங்கியது என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, "போரில்
மங்கினர் பகைஞர்" என்ற வார்த்தையே வலியது! என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான்.
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி.
அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க.
இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்
என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான்.
தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார்.
பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க.
மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா,
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும்.
தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்.
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்.
இந்திரசித்தை இராவணன் காணல்
அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி பொங்கத்
தரிக்கிலன், மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன,
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான்.
எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும் அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன், தோன்றல்!
அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது? என்று எடுத்துக் கேட்டான்;
புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்:
இந்திரசித்தின் மறுமொழி
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்?
இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்,
நொந்திலென்; இனையது ஒன்றும் நுவன்றிலென்; மனிதன் நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ.
இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம் வயின் தங்கிற்று அன்றால்;
விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல் விளையும் என்ன
உளை; அது அன்று என்னச் சொன்னான், உற்றுளது உணர்ந்திலாதான்.
வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்கு வீரர்தம்மொடு அக் கொற்றத் தோனை;
நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க, மேன்மேல்
என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்:
இராவணன் உரை
வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான்.
இந்திரசித்தின் வினா
ஐய! வெம் பாசம் தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு பேர்ந்தார்;
"உய்யுநர்" என்று உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?
"செய்யும்" என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா.
களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்
ஈது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
யாது அவண் நிகழ்ந்தது? என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று,
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்:
பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத்தான் இரங்கி, ஏங்கி, "உலகு எலாம் எரிப்பென்" என்றான்;-
வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்;
அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது என்றார், அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்: இராவணன் கூற்று
"ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின், காண்மின்!
வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!
மூத்தது, கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம்?
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்;
மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்?
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,
உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி?
இராவணன் இந்திரசித்தைப் போரிடக் கூறல்
ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி
மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
காண்டலும், நாணும் என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான்:
இந்திரசித்தின் மறுமொழி
இன்று ஒரு பொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென் என்றான்;
நன்று என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான்.
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான்.
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன்.
சிந்து வாளி செறிதலும், சேவகன்
ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான்.
அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீ
விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
கொழித்தனள்; இமையோர் மெய் குலுங்கினார்.
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான்.
மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
முற்று நாளில் முயற்சி முரஞ்சவே.
கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான்.
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ.
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான்.
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான்.
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும்.
பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ.
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன்.