வேள்விப் படலம் - 449

bookmark

449.

‘’அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு. ‘கொடேல்’ என நின்று.
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஓர் கேடு இலை’’ என்றான்.
 
அடுப்ப   அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர்-  பிறர்  அழியும்படி
பழிச்செயல்     செய்யும்      தீத்தொழிலுடையோர்     பகைவரல்லர்;
கொடுப்பவர் முன்பு -  கொடுப்பவருக்கு  எதிரே  நின்று   கொண்டு;
கொடேல்  என  நின்று  தடுப்பவரே  பகை - கொடுக்காதே என்று
கூறித் தடுப்பவரே  பகைவராவார்; அன்னார் தம்மையும்  கெடுப்பவர்
- அத்தகையோர்  கொள்வாரையும்  கொடுப்பாரையுமல்லாது  தம்மையும்
கெடுத்துக்  கொள்பவரே ஆவர்; அன்னது ஓர் கேடு இலை என்றான்
- (ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.

அடுப்ப:  கெட.  பழி:  பாவச்   செயல்.   செய்ஞ்ஞர்:  செய்வோர்.
கொடேல்:  எதிர்மறை  வியங்கோள்.  அன்னது:  போன்றது.  அன்னர்:
அத்தகையோர்.    இலை:    இல்லை     என்பதன்     இடைக்குறை.
பழிபாவங்களைச் செய்வோர் பகைவரல்லர். கொடுப்பதைத்   தடுப்பவரே
பகைவராவார்.    கொள்வோரையும்.   கொடுப்போரையும்    அல்லாது
தடுப்போர் தம்மையே கெடுத்துக் கொள்வோராவார் என்பது கருத்து. 30