வேள்விப் படலம் - 434

bookmark

சித்தாச்சிரமத்தின் பெருமை

434.

‘தங்கள் நாயகரின் தெய்வம்
   தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்
   தூயது; மற்றும் கேளாய்;
எங்கள் நான்மறைக்கும். தேவர்
   அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்
செங் கண் மால் இருந்து. மேல்நாள்
   செய் தவம் செய்தது அன்றே.
 
தங்கள்  நாயகரின் தெய்வம் தான்பிறிது  இலை  -   தங்களது
கணவரைக்    காட்டிலும்   தெய்வம்   வேறுஇல்லை;  என்றெண்ணும்
மங்கைமார்- என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது
-  மனத்தைப்போல  (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் -
பின்னும் சொல்லுகிறேன்  கேட்பாயாக;  எங்கள்  நான் மறைக்கும் -
எங்களுடைய  நான்கு   வேதங்களுக்கும்;   தேவர்  அறிவிற்கும்  -
தேவர்களின்    நுட்பமான    அறிவுக்கும்;    பிறர்க்கும்   எட்டாச்
செங்கண்மால்  -   மற்றவர்களுக்கும்  (உள்ளம்.  உரை) செயல்களால்
எட்டமுடியாத  திருமால்;  இருந்து  மேல் நாள் - இங்குத் தங்கி முன்
ஒரு  காலத்திலே; செய்தவம் செய்ததன்றே - செம்மையான தவத்தைச்
செய்த இடமல்லவா?

நாயகன்:   தலைவன்.  கணவன். ‘மங்கை’ பருவப் பெயரேயாயினும்
பெண்களைப்   பொதுவாக   இப்பெயரில்  குறிப்பிடுவது  மரபு.  மார்:
பலர்பால்   விகுதி.  சிந்தை:   மனம்.  ‘எங்கள்  நான்மறை’  என்றது.
அறநெறி  நிற்கும்  அறிவுடையோர்க்கு   உரியது  என்பதை உணர்த்தி
நின்றது.  எட்டா:  எட்டாத  (ஈறுகெட்ட   எதிர்மறைப்  பெயரெச்சம்).
எட்டு:  பகுதி.  செங்கண்மால் தவம் செய்த  சிறப்புடையது இச்சோலை
என்றானென்க.  அன்றே: அல்லவா என்பது  பொருள். அசை எனினும்
பொருந்தும்.                                               15