வேள்விப் படலம் - 421

bookmark

படைக்கலங்கள் இராமபிரானுக்குப் பணிபுரிய முன்வருதல்

421.    

‘மேவினம்; பிரிதல் ஆற்றேம்;
   வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும்.
   இளையவன் போல’ என்று
தேவர்தம் படைகள் செப்ப.
   ‘செவ்வியது’ என்று அவனும் நேர.
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில்
   புரிந்த அன்றே.
 
வீர!  மேவினம் பிரிதல் ஆற்றேம்  -  வீரனே!  நாங்கள்  வந்து
உன்னை  அடைந்தோம்.  பிரிதல்  செய்யோம்;  நீ விதியின்  எம்மை
ஏவின  செய்து  -  நீ  முறைப்படி  எங்களை  ஏவிட்ட  காரியத்தைச்
செய்து;  இளையவன்  போல  நிற்றும்  என்று  -  இளையவனாகிய
இலக்குவனைப்போலப்   பணிபுரிந்து   நிற்போம்   என்று  படைக்கலத்
தேவதைகள்  கூற; அவனும்  செவ்விது என்று நேர - இராமபிரானும்
நல்லது.  என்று  ஒப்புக்கொள்ள;  பூவை  போல்  நிறத்தினாற்கு  -
காயாம்பூவைப்  போன்ற நிறம் கொண்ட இராமபிரானுக்கு; புறத்தொழில்
புரிந்த - ஏவல் தொழிலைச் செய்திருந்தன.

மேவினம்.   ஆற்றேம் என்பன தன்மைப் பன்மை  வினைமுற்றுகள்.
பிரிதல்:  தொழிற்பெயர்.  விதியின்  முறைப்படி.  நிற்றும்:    செவ்விது:
அழகிது.  நேர: ஒப்ப. பூவை: காயாம்பூ. புறத்தொழில்: ஏவல்   தொழில்.
தெய்வப்படைக்   கலங்களுக்குரிய  தேவதைகள்  இராமனை   நோக்கி
‘’வீரனே! நாங்கள் உன்னை அடைந்தோம். இனிப்பிரிய மாட்டோம்.   நீ
ஏவிய  பணியைச்  செய்து  இலக்குவனைப்  போல.  நிற்போம்   என்.
இராமனும்   அழகிது  என்று  ஒப்புக்  கொள்ள  -    அப்படைக்கலத்
தேவதைகள்  இராமனுக்கு  ஏவல்தொழிலைச்  செய்திருந்தன    என்பது
பொருள்.                                                  3