வரைக்காட்சிப் படலம் - 965
965.
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய
காட்சி யாலும்.
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு
சிரங்க ளாலும்.
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம்
மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது -
அவ் ஆசு இல் குன்றம்.*
கண்ணுக்கு இனிது ஆகி- கண்களுக்கு அழகுடையதாகி; விளங்கிய
காட்சியாலும் - தோன்றுகின்ற தோற்றப் பொலிவாலும்; எண்ணற்கு
அரிது ஆகி - எண்ணுவதற்கு அரிதாகுமாறு; இலங்கு சிரங்களாலும் -
(ஆயிரக் கணக்கில்) விளங்கும் முடிகளாலும்; வண்ணம் - அழகு
சேர்ந்ததாகிய; கொழுஞ் சந்தனச் சேதகம் - வளமான சந்தனக்
குழம்பை; மார்பு அணிந்த - (தன்) மார்பில் அணிந்த; அண்ணல்
கரியோன்தனை - பெருமையுள்ள திருமாலை; அவ் ஆசு இல் -
அந்தக் களங்கம் இல்லாத; குன்றம் ஒத்தது - குன்றமானது
ஒத்திருந்தது.
கண்ணிற்கு இனிய காட்சியாலும் முடி ஆயிரத்தாலும் சந்தனம்
மார்பில் அணிந்ததாலும் சந்திர சயில மலை திருமாலை ஒத்தது
என்றார். மலைக்குச் சிரம்: சிகரம். மார்பு: நடுவிடம். 38
