வரைக்காட்சிப் படலம் - 963

bookmark

அந்தி மாலை வருணணை

அந்திக் காலத்தில் மலைக்காட்சி
 
963.

மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர். அங்கு. அதன்மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய. ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது. செக்கர் வானம்.
 
மஞ்சு ஆர் மலை - மேகம் தங்கிய அந்த மாலையானது; வாரணம்
ஒத்தது  -  யானையைப் போன்றுள்ளது; வானின் ஓடும் - வானத்தில்
விரைந்து   செல்லுகின்ற;   வெம்   சாயை   உடை  -  வெப்பமான
கதிர்களையுடைய;  கதிர்  -  சூரியன்;  அதன்  மீது பாயும் - அந்த
யானைமேல்  பாய்கின்ற;  பஞ்சானனம் ஒத்தது - சிங்கத்தையொத்தது;
செக்கர்  வானம் - செவ்வானமானது; அது பாய ஊறும் - அச்சிங்கம்
(யானைமேல்)  பாய்ந்ததால்  சுரக்கின்ற;  செஞ்சோரி  என  - சிவந்த
இரத்தம் போல; பொலிவுற்றது - விளங்கியது. 

அந்திப்     பொழுது   உண்டாகச்  சூரியன்   மலையைச்   சேரச்
செவ்வானம்   தோன்றியது.    இதனை    ஒரு  யானை  மீது  சிங்கம்
பாய்ந்ததால்   எங்கும்   இரத்தம்    ஊறியதைப்   போன்றது  என்று
வருணித்தார்- தன்மைத் தற்குறிப்பேற்றவணி.                    36