வனம் புகு படலம் - 2121
இராமன் முதலியோர் பரத்துவாசமுனிவனிடம் விடைபெற்றுச்
சென்று யமுனைக்கரை அடைதல்
முனிவன் பால் விடைபெற்று மூவரும் யமுனைக்கரை சேர்தல்
2121.
என்று காதலின் ஏயினன்
அடி தொழுது ஏத்தி,
கொன்றை வேய்ங் குழல்
கோவலர் முல்லை, அம் குடுமி
சென்று செங் கதிர்ச்
செல்வனும் நடு உற, சிறு மான்
கன்று நீர் நுகர்
காளிந்தீ எனும் நதி கண்டார்.
என்று காதலின் ஏயினன் - என்று கூறி அன்போடு (அவர்களை
வழியனுப்பின முனிவனடைய;அடி தொழுது ஏத்தி - திருவடிகளை
வணங்கித் துதித்து; (மூவரும் வழிக் கொண்டு); கொன்றை வேய்ங் குழல்
கோவலர் முல்லை - கொன்றை; மூங்கில் ஆகியவற்றால் ஆகிய குழலை
உடைய இடையர்களது முல்லை நிலத்தையும்; அம் குடுமி - அழகிய
மலைச் சிகரத்தையும்; சென்று - கடந்து போய்; செங்கதிர்ச் செல்வனும்
நடு உற - செந்நிறமானகதிர்களை உடைய சூரியனும் உச்சியை அடைய
(நண்பகற் போதில்); சிறுமான் கன்று -சிறிய மான்குட்டி; நீர் நுகர் -
தண்ணீர் அருந்துகின்ற; காளிந்தி எனும் நதிகண்டார் - யமுனை
என்னும் நதியினைக் கண்டார்கள்.
‘அம் குடுமி சென்று செங்கதிர்ச் செல்வனும் நடுஉற’ என்பதனை,
சூரியனும் அழகிய உச்சிநடுவைச் சென்று அடைய எனப்பொருள்
உரைத்தலும் ஒன்று. கோவலர் கொன்றை, மூங்கில்முதலியவற்றால் குழல்
செய்து ஊதுவர். நீண்ட கொன்றைப் பழத்தைத் துருவித் துளையிட்டுக்
குழல்செய்தல் வழக்கமாம். காளிந்தி - யமுனையின் மறுபெயர், கருமை
நிறம் உடையது என்பதாம். 34
