ருக்மிணி லட்சுமிபதி
ருக்மிணி லட்சுமிபதி (ருக்மிணி லக்ஷ்மிபதி, பி. டிசம்பர் 6, 1892 – இ. ஆகஸ்ட் 6, 1951) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார்.
ருக்மிணி லட்சுமிபதி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:-
ருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி. ருக்மிணி 1923 ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926 ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1930 ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான். 1934 ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937 லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937 ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான். சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது "ருக்மிணி லட்சுமிபதி சாலை" என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
