யேசுகிறிஸ்து

யேசுகிறிஸ்து

bookmark

'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான். 
  எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் 
நேசமாமரியா' மக்த லேநா 
  நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள். 
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்; 
  தேவர் வந்து நமக்குட் புகுந்தே 
நாச மின்றி நமை நித்தங் காப்பார்; 
  நம் அகந்தையை நாம் கொன்று விட்டால். 

அன்புகாண் மரியா மக்த லேநா 
  ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து; 
முன்பு தீமை வடிவினைக் கொன்றால் 
  மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்; 
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே 
  போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை; 
அன்பெனும் மரியா மக்த லேநா 
  ஆஹ! சாலப் பெருங்கிளி யிஃதே. 

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி 
  உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால் 
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து 
  வான மேனியில் அங்கு விளங்கும்; 
பெண்மைகாண் மரியா மக்த லேநா, 
  பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து, 
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர் 
  நொடியி லிஃது பயின்றிட லாகும்.