முகம்மது நபி

முகம்மது நபி

bookmark

முகம்மது நபி அல்லது முகம்மது (அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தாலிப் இப்னு ஆசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم), மக்கா நகரைச் சேர்ந்தவர். இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இசுலாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.

முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை :-

மெக்காவில் பிறந்த முகமது, தனது வாழ்நாளில் 52 வருடங்களை அங்கேயே கழித்தார். இந்த 52 வருடக்காலத்தை இரண்டு பாகங்களாக பிரிக்கின்றனர் - இறைதூது கிடைக்கும் முன் மற்றும் இறைதூதர் என தன்னை அறிவித்தப் பின்னர்.

இறைத்தூது கிடைக்கும் முன் :-

முகமது அவர்கள் கி.பி. 570 ஆண்டு பிறந்தார். அவரது பிறப்பு ரபியுல் அவ்வல் மாதத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது. பானு ஹஷிம் எனும் குலத்தை சேர்ந்த மெக்காவின் மிகவும் பிரபலமான குடும்பத்தில் அவர் பிறந்தார். குரய்ஷ் எனும் பழங்குடியின மக்களின் ஒரு இனமே இந்த பானு ஹஷிம். ஆபிரகா எனும் அக்குசுமைட் மன்னன் தனது யானை பலம் பொருந்திய படையுடன் மெக்காவை தாக்க முயன்று தோல்வியுற்றதனால், கி.பி 570-ஆம் வருடத்தை யானைகளின் வருடம் என கூறி வந்தனர். அந்த வருடத்தில் முகமது பிறந்ததாக கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் வல்லூனர்கள் இந்த தோல்வியுற்ற யுத்தத்ததை ஓரிரு வருடங்கள் பின்தள்ளி வைக்கின்றனர். மேலும், சின்னம்மை தொற்றே அந்த அக்குசுமைட் படையின் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்.

முகமது அவர்களின் பிறப்பிற்கு ஆறு மாதங்கள் முன்னரே அவரது தந்தை அப்துல்லா இறந்துவிட்டார். பாலைவனமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது என கருதி, சிறுபிள்ளையான முகமதை பாலைவனத்தில் உள்ள ஓர் பெதாவுன் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தனர். செவிலித்தாய் ஹலிமா பின்த் அபு துயப் மற்றும் அவளது கணவரின் பாதுகாப்பில் இரண்டு வயது வரை வளர்ந்து வந்தார் முகமது. ஆனால், சில மேற்கத்திய இசுலாமிய வல்லுனர்கள் இதை மறுக்கின்றனர். ஆறு வயதில் தன்னைப் பெற்ற தாயான அமீனாவை பறிகொடுத்து அனாதையானர் நபிகள். அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனது தாத்தா அப்து அல்-முத்தாலிப் அவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். தாத்தாவின் மரணத்திற்குப்பின் பானு ஹஷிமின் புதிய தலைவரான தனது மாமா அபு தாலிப் அவர்களின் மேற்பார்வையில் வளர்ந்தார். ஆறாம் நூற்றாண்டு அரபு தேசத்தில், ஒரு குலத்தின் வலுவற்றவர்கள் நன்கு கவனிக்கப்படவில்லை என இசுலாமிய வரலாற்று எழுத்தாளரான வில்லியம் மோன்ட்கோமேரி வாட் கருதுகிறார். அவர் எழுதுகையில், 'சிறுவனான முகமது சாகாமல் இருக்க மட்டுமே உணவு அளித்து வந்தனர் காப்பாளர்கள், ஏனெனில் அப்பொழுது பானு ஹஷிம் குலம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது'.

பதினம் வயதில் முகமது அவர்கள், அவரது மாமாவுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய ஒத்தாசையாக சென்றுள்ளார். இசுலாமிய வல்லுநர்கள் இந்த நிகழ்வு முகமது அவர்களின் ஒன்பதாவது அல்லது பன்னிரெண்டாவது வயதில் நிகழ்ந்ததாக கருதுகின்றனர். மேலும், இது போன்ற ஓர் வணிக பயணத்தின் பொழுது, பஹிரா எனும் கிறிஸ்த்துவ துறவியை முகமது சந்தித்துள்ளார். அந்த துறவி முகமது இறைதூதராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முகமது அவர்களின் இளைய வயதை பற்றி தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மேலும், சில நிகழ்வுகள் வரலாறா அல்லது கதையா என முடிவு செய்ய இயலவில்லை. முகமது அவர்கள் ஓர் வணிகராக பணிப்புரிந்துள்ளார். மெடிட்டரேனியன் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் இடையே நடந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி, அவருக்கு அல்-அமீன் என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. முகமதுவை 'பேதமற்ற நடுவர்' என அக்காலத்தில் அவரை பலர் நாடியுள்ளனர். அவரது இந்த புகழால் 595-ஆம் ஆண்டில் கதீஜா எனும் நாற்பது வயது விதவை பெண் அவரை திருமணம் செய்ய விரும்பினார். முகமது கதீஜா அவர்களை மணம் முடித்தார். அவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வரலாற்றாசிரியர் இப்னு இஷாக் அவர்கள் விவரிக்கையில், கிபி 605 ஆம் ஆண்டு காபாவில் கல் பதிப்பு நிகழ்வில் முகமது அவர்களின் பங்கு இருப்பதாக கூறுகிறார். காபாவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பொருட்டு அதில் இருந்த புனித கருப்புக் கல் அகற்றப்பட்டது. ஆனால், அந்த கல்லை திரும்ப அதே இடத்தில் எந்த குலத்தை சேர்ந்தவர் நிறுவுவது என்பதில் மெக்காவின் தலைவர்கள் மத்தியில் சமரசம் எட்டப்படாமல் போனது. அவ்வழியே யார் அடுத்து வருகிறார்களோ, அவரே அத்திருப்பணியை செய்ய தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அப்பொழுது அவ்வழியே முகமது நபிகள் வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு துணியில் அந்த கருப்பு கல்லை தாங்கி, மற்றவர் உதவியுடன் அதனை காபாவிற்கு எடுத்து சென்று, முகமது அவர்கள் அக்கல்லை காபாவில் திரும்ப நிறுவினார்.

இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்

மெக்காவில் உள்ள ஹிரா எனும் மலை குகையில், முகமது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம். கிபி 610-ஆம் வருடம், இதேப்போல முகமது அவர்கள் அம்மலைக்கு சென்றபோது, காப்ரியல் எனும் தூதர் அவருக்கு சில வாக்கியங்களை கூறி ஒப்பிக்க சொன்னதாகவும், பின் அதுவே குரானில் இடம்பெற்றதாகவும் இசுலாமிய வரலாறு கூறுகிறது. காப்ரியல் முதலாவதாகத் தோன்றிய பின், முகமது அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவளது கிறிஸ்த்துவ சகோதரரான வரக்கா இப்னு நஃபல் இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகமது அவர்கள் அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்தது போல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. காப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது அவர்கள் தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. காப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை" எனக் கூறி மத போதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்.

"மணியடிப்பதுப் போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக சஹி புகாரி கூறுகிறார். "ஒவ்வொரு தெய்வ வாசகம் தோன்றிய பிறகு, நபிகளின் நெற்றியில் வியர்வை துளிகள் தோன்றும்" என்று ஆயிஷா கூறுகிறார். தனது யோசனைகளையும் தெய்வ வாக்குகளையும் பிரிக்கும் திறன் தமக்கு இருந்ததாக முகமது அவர்களே நம்பிக்கைக் கொண்டார். குரானின்படி, உலகின் இறுதிகால தண்டனைகளை பற்றி இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு எடுத்து கூறவே முகமது நபிகளாக வந்ததாக கருதப்படுகிறது. சில இடங்களில், குரான் தீர்ப்பு நாளை பற்றி நேரடியாக சொல்லாதப்போழுதும், முன்னர் அங்கு இருந்த சமூகங்களின் அழிவை எடுத்துக்காட்டி, முகமது காலத்தில் வாழ்ந்தவர்களை எச்சரிக்கிறது. கடவுளின் வாசகங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை எச்சரிப்பதோடு நில்லாமல், தீயவைகளை துறப்பவர்களுக்கும், தெய்வீக வாசகங்களை கேட்பவர்களுக்கும், கடவுளுக்கு சேவகம் செய்பவர்களுக்கும் நற்செய்தி கூறினார். ஓரிறைவாதமே முகமது அவர்களின் முக்கிய பணியாக கருதப்படுகிறது: அல்லாஹ்வின் பெயரை அறிவிக்கவும் மற்றும் புகழவும் மற்றும் சிலைகளை வழிபடுதல் அல்லது வேறுக்கடவுளுடன் அல்லாஹ்வை ஒப்பிடுதளையும் தவிர்க்குமாறு குரான் முகமது அவர்களுக்கு கட்டளை இடுகிறது.

தன்னை படைத்தவரிடம் காட்ட வேண்டிய பொறுப்புகள், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், இறைவனின் கடைசி தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து சொர்க்கம் மற்றும் நரகத்தை பற்றிய விரிவான விளக்கங்கள்; மற்றும் வாழ்க்கையின் அத்தனை கோணங்களிலும் கடவுளின் அறிகுறிகள் என பல்வேறு விஷயங்கள் குரானின் முதல் வரிகளில் அடங்கியுள்ளன. இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண்சிசுவதைக்கு தடை என இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எதிர்ப்பு :-

இசுலாமிய வரலாற்றுப்படி, முகமது அவர்களை நபிகள் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார். கதீஜாவை தொடர்ந்து முகமது அவர்களின் மாமா மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பகர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர். கிபி 613-ஆம் வருடத்தில், முகமது அவர்கள் பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran 26:214). மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர். எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்.

சிலை வழிபாடு மற்றும் பல்லிறைவாதம் பின்பற்றிய மெக்காவின் முன்னோரை முகமது அவர்கள் கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார். ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது. அந் நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, முகமது அவர்கள் எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது. மெக்காவின் முந்தைய மதத்தை முகமது அவர்கள் கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகமது அவர்களை தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகமது அவர்கள் மறுத்தார்.

முகமது மற்றும் அவரை பின்பற்றியவர்களை பலர் துன்புறுத்தியுள்ளனர். அபு ஜால் எனும் மெக்காவின் தலைவரின் அடிமையான சுமையா பின்த் கபாப் எனும் பெண் தான் இசுலாத்தின் முதல் தியாகி ஆவார்; இசுலாத்தை துறக்க கூறி அவளை ஈட்டியால் குத்தி கொன்றனர்.முகமது அவர்கள் பானு ஹஷிம் இனத்தை சேர்ந்ததனால், அவருக்கு யாரும் தீங்கு இழைக்கவில்லை.

நபிகள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறல்

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின் உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர் அவர்களுடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடி பெயர்ந்து சென்றார். யாராலும் கொல்ல முடியாத தலைவராக நபிகள் நாயகம் இருந்தார். அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்து இருந்தார். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. போர்க்களங்களிலும் பங்கெடுத்தார்.

முகமதுநபி(ஸல்) திருமணம் செய்த பெண்கள்:-

கதிஜா, சௌதா பிந்த் சமா, ஆயிஷா, ஹவ்சா பிந்த் உமர், சைனாப் பிந்த் குசைமா, உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா, யுவேரியா பிந்த் ஹரித், உம் ஹபிபா ரம்லா, சபியா பிந்த் ஹீயாய், மைமுனா பிந்த் அல் ஹரித் ஆகியவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் பார்வையில் நபிகள் நாயகம்:-

"உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.

M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33)

"உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத் தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப் படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.    "

- அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276–277)

"மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல"

- மகாத்மா காந்தி - (யங் இந்தியா - Young India)

"சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறு தான் அவரால் உருவாக்க முடிந்ததோ    "

- Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

"அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தை தான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறைத் தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வொரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.

- போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith

நபிகளின் தோழர்கள் :-

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி), பிலால் (ரலி) ஆகியோர் நபிகளின் தோழர்கள் ஆவர்.

முகம்மது நபியின் இறுதிப் பேருரை :-

முகம்மது நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரை விட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.

(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

என்று கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது. முஹம்மத் நபியின் ஒவ்வொரு வசனங்களும் மிக நுணுக்கமாக ஆதாரபூர்வமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வுரையை கட்டுரை வடிவில் தொகுக்க முடியாதுள்ளது.

நபிகளின் தொடக்கவுரை:-

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.

(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத் தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத் தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையே தான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப் பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)