மிதிலைக் காட்சிப் படலம் - 719

bookmark

சனகன் வீற்றிருத்தல்

வேள்வி  முற்றிய  சனகன்   முனிவர்   முதலாயினார்   புடைசூழ
வீற்றிருத்தல்

719.

முடிச் சனகர் பெருமானும். முறையாலே
   பெரு வேள்வி முற்றி. சுற்றும்
இடிக் குரலின் முரசு இயம்ப. இந்திரன்போல்.
   சந்திரன் தோய். கோயில் எய்தி.
எடுத்த மணி மண்டபத்துள். எண் தவத்து
   முனிவரோடும். இருந்தான் - பைந் தார்
வடித்த குனி வரி சிலைக் கைம் மைந்தனும்.
   தம்பியும். மருங்கின் இருப்ப மாதோ.
 
முடிச்  சனகர் பெருமானும்- பொன்முடி தரித்த சனக  மன்னனும்;
முறையால்  - (அப்பொழுது)  வேதவிதி முறைப்படியே; மறைவேள்வி
முற்றி  -  வேத  மந்திரங்களோடு  கூடிய  யாகத்தை  முடித்துவிட்டு;
சுற்றும்  - எல்லாப்  பக்கங்களிலும்;  இடிக் குரலின் - இடி முழக்கம்
போன்று; முரசு இயம்ப  -  பேரிகைகள் ஒலிக்க; இந்திரன் போல் -
தேவேந்திரன் போல; சந்திரன் தோய் - சந்திர மண்டலத்தை அளாவி
உயர்ந்துள்ள; கோயில் எய்தி - அரண்மனையை அடைந்து; எடுத்த -
அங்கே   உயர்ந்து  அமைந்த;  மணி  மண்டபத்துள்  -  நவரத்தின
மண்டபத்திலே    (விசுவாமித்திரன்  முதலியோரை  உபசரிக்க);  எண்
தவத்து    -   மதிக்கத்தக்க  தவத்தையுடைய;  முனிவரொடும்   -
விசுவாமித்திர  முனிவனுடன்; பைந்தார் - பசுமையான  வெற்றி மாலை
சூடிய;  வடித்த  குனி வரிசிலை - வளையும் இயல்புள்ள கட்டமைந்த
நீண்ட வில்லை ஏந்திய; கை மைந்தனும் - கையையுடைய இராமனும்;
தம்பியும் - அவன் தம்பியாகிய இலக்குமணனும்; மருங்கின் இருப்ப -
(தன்)    பக்கத்திலே    வீற்றிருக்க;    இருந்தான்    -   இனிதாக
அமர்ந்திருந்தான் சனகன்.  

சனகன்     தன்  வேள்வி  முடிந்ததும் அரண்மனை மண்டபத்தில்
வேள்வி கண்டு வந்த  விசுவாமித்திரனும். இராம  லக்குவர்களும் உடன்
இருக்கத் தங்கினான் எனலாம். சிலைக்  கைம்  மைந்தன்: வில்லாற்றலும்
தோள் வலிமையும் மிக்கவன் இராமன்.                         156