மிதிலைக் காட்சிப் படலம் - 706

bookmark

706.

‘பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ?
 
பூண்     உலாவிய   -   அணிகலன்கள்   அசையப்    பெற்ற;
பொன்கலசங்கள் -  பொன் கலசங்களைப் போன்ற (அப்  பெண்ணின்
கொங்கைகள்; என் ஏண் இல்  - பெருமையற்ற எனது;  ஆகத்து  -
மார்பிலே; எழுதல  என்னினும்  - அழுந்திப் பதியாமல்  போயினும்;
வாள்  நிலா  முறுவல்   -   ஒளியுடைய   சந்திரகாந்தி    போன்ற
புன்சிரிப்பையும்;    கனிவாய்   -   கொவ்வைப்   பழம்    போன்ற
அதரத்தையும்  உடைய;  மதி  -  (அவளது  முகமாகிய)   சந்திரனை;
காணல்  ஆவது  -  (மீண்டும்)  பார்ப்பதற்கு;  ஓர்காலம்   -  ஒரு
காலமேனும்; உண்டாம் கொலோ - உண்டாகுமோ?   

சீதையைத்  தழுவும் கைகூடாவிட்டாலும் அவளது  முகதரிசனமானது
இன்னொருமுறை   கூடினால்   போதுமென   இராமன்   தன்  காதல்
மிகுதியை   வெளியிடுகிறான்.  முறுவலைக்  கண்ட  இராமன்   அதன்
அருகிலுள்ள  அதரத்தையும்  கண்டு  ‘முறுவல்  கனிவாய்மதி’   எனக்
கூறினான். கலசம். மதி - உவமையாகு பெயர்கள்.                143