மிதிலைக் காட்சிப் படலம் - 682
கோசிகன் மேற்றிசை சென்று தவமியற்றல்
கௌசிகன் மேலைத்திசை சென்று தவம் புரிதல்
682.
“அரச மா தவன் நீ ஆதி;
ஐந்து நாள் தென்பால் வந்து. உன்
புரை விளக்கிடுக!” என்னா.
கடவுளர் போய பின்னர்.
நிரை தவன் விரைவின் ஏகி.
நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம்அதனை நண்ணி.
உறு தவம் உஞற்றும் காலை.
அரச மாதவன்- சிறந்த அரசமுனி; நீ ஆதி - நீ ஆவாய்; ஐந்து
நாள் தென்பால் - (வடக்கேயுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள்)
ஐந்து நட்சத்திரங்கள் தெற்குத் திசை; வந்து உன்புரை - வந்திருந்து
உன் மேன்மையை ; விளக்கிடுக - தெரிவிக்க கடவன; என்னா -
என்று சொல்லி (கௌசிகனைச் சமாதானப்படுத்திவிட்டு); கடவுளர்
போய பின்னர் - தேவர்கள் புறப்பட்டுப் போன பின்பு; நிரை தவன்
- நேர்மையான அத்தவ முனிவன்; விரைவின் ஏகி - வேகமாகச்
சென்று; நெடுங்கடற்கு இறைவன் - பெரிய கடலுக்குத் தலைவனான
வருணன்; வைகும் - (திக்குப் பாலகனாக) தங்கப்பெற்று; உரவு இடம்
அதனை - வலிய இடமான மேற்குத் திசையை; நண்ணி - அடைந்து;
உறுதவம் - மிக்க தவத்தை; உஞற்றும் காலை -செய்து வருங்
காலத்து.
ஐந்து நட்சத்திரங்கள்: அனுடம். கேட்டை. மூலம். பூராடம்.
உத்திராடம். படைப்புக் காலம் தொடங்கி வடதிசையில் இருந்த இவை
விசுவாமித்திரனுக்காக தென் திசைக்கு வந்தன என்பர். 119
