மிதிலைக் காட்சிப் படலம் - 673
திரிசங்கு சண்டாளனாதல்
673.
‘மலர் உளோன் மைந்தன் - மைந்த! -
வழங்கிய சாபம்தன்னால்
அலரியோன்தானும் நாணும்
வடிவுஇழந்து. அரசர் கோமான்.
புலரிஅம் கமலம்போலும்.
பொலிவு ஒரீஇ. வதனம். பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த
படிவம் வந்துற்றது அன்றே.
மைந்த - இளைஞனான இராமனே! மலருளோன் மைந்தன் -
பிரமதேவன் மகனான வசிட்டன்; வழங்கிய சாபம் தன்னால் - இட்ட
சாபத்தால்; அரசர் கோமான் - அரசர் தலைவனான திரிசங்கு;
அலரியோன் தானும் - கதிரவனும்; நாணும் வடிவு இழந்து
- வெட்கப்படுமாறு இருந்த தன் அரச வடிவத்தை நீங்கி; புலரி அம்
கமலம் போலும் - உதய காலத்தில் மலர்கின்ற தாமரை போன்ற;
வதனம் பொலிவு ஒரீஇ - திருமுகத்தின் அழகு கெட்டு; பூவில்
பலரும் - பூவுலகில் எல்லோரும்; இகழ்தற்கு ஒத்த படிவம் -
இகழ்தற்கரிய சண்டாள வடிவம்; ஆங்கு அன்றே - அவ்வரசனுக்கு
அந்த இடத்தில் அப்போதே; வந்து உற்றது - வந்து அடைந்தது.
திரிசங்கு. தன்மேனி முகப்பொலிவு யாவும் நீங்கிச் சண்டாள
வடிவத்தை அடைந்தான். அலரி: ஆயிரம் கதிர்களால்
விளங்குபவன். 110
