மிதிலைக் காட்சிப் படலம் - 589

bookmark

கலித்துறை
 
589.

வென்று அம் மானை. தார் அயில்
   வேலும் கொலை வாளும்
பின்ற. மானப் பேர் கயல்
   அஞ்ச. பிறழ் கண்ணாள்.
குன்றம் ஆட. கோவின்
   அளிக்கும் கடல் அன்றி.
அன்று அம் மாடத்து உம்பர்
   அளிக்கும் அமுது ஒத்தாள்.
 
அம்  மானை வென்று -  (புலவர்கள் உவமை கூறும்)   அழகிய
மானை  (ப்பார்வையில்)  வென்று;   தார்  அயில்     வேலும் -
மாலையணிந்த கூரிய   வேலும்;  கொலை  வாளும்  -   கொலைத்
தொழிலில்  வல்ல  வாளும்;  பின்ற  -  (ஒப்பாகாமல்)   பின்னிடும்
்படியாகவும்;   மானம்   பேர்கயல்  அஞ்ச  -  (மற்ற பெண்களின்
கண்களுக்கு உவமையாகக் கூறப்படும்) சிறந்த பெரிய கயல்  மீன்களும்
(ஒப்பாகாமல்) அஞ்சிப் பின்னே நிற்கும்படியாகவும்;  பிறழ்கண்ணாள்
-  பிறழும்  கண்களையுடைய  சீதையானவள்;   குன்றம்  ஆட  -
(மந்தர)  மலை  (தன்னிடத்தில்) சுழலும்படி; கோவின்  அளிக்கும் -
‘கோ’ என்னும் ஆரவாரத்தோடு (அமுதத்தைத்) தந்த; கடல்  அன்றி
- கடலால் அல்லாமல்; அன்று  அம்மாடத்து  -  அக்  காலத்திலே
அக்  கன்னி மாடத்தின்; உம்பர் அளிக்கும்  -  மேலிடம்  தந்த  ;
அமுது  ஒத்தாள்  - அமுதத்தை ஒத்தவள் ஆவாள்.   

கடல்   முது.  சீதை:  கடலானது வேறு ஒன்றினால் கடையப்பட்டு
மிக  நலிந்து  பெற்ற அமுதம் இந்தச் சீதைக்கு ஒப்பாகாது;ஏனெனில்
மாடத்தின்  மேலிடம்  ஒரு  சிறந்த  அமுதத்தை எளிதாகப் பெற்றாற்
போல்பவள் இவள். தார் அயில் வேல்; தார் அயில் கொலைவாள் என
அமையும்.  அவ்வாறே.  கொலைவாள். கொலைவேல் என அமையும்.
கோ-ஒலிக் குறிப்பு. இடைச்சொல்.                           26