பெர்ட்ரண்டு ரசல்
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்தஇவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையைக் கழித்தார். பெர்ட்ராண்ட் ரசல் மே 18, 1872 அன்று ஐக்கிய இராச்சியம், மான்மத்சயரில், டிரெல்லெக் என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தைவழிப் பாட்டன், முதல் ஏர்ல் ரசல், பெட்போர்ட் ஆவார். அவர் விக்டோரியா மகாராணியால் அரசு அமைக்க அழைக்கப்பட்டு, அரசியின் பிரதம மந்திரியாக 1840, 1860களில் பணி புரிந்தார்.
ரசல் குடும்பம் பிரித்தானியாவில் பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் புகழ்பெற்று இருந்தது. டியூடர் வம்சம் அரசாளும் போது, அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர்னர். பிரித்தானியாவின் விக் (லிபரல் கட்சி) கட்சியின் பெரும் புள்ளிகளாகி, பிரித்தானியாவின் ஒவ்வொரு பெரும் அரசியல் மாற்றங்களில் போதும், சீரிய பங்கு வகித்தனர். சான்றாக 1536-ல் மடங்களின் ஒழிப்பு, 1688-89 காலத்தில் குளோரியசு புரட்சி (Glorious Revolution,1832) மாபெரும் சீர்திருத்தச் சட்டங்கள் இவற்றில் பங்கு வகித்தனர்.
ரசலின் தாய், காதரின் லூயிசா (1844-1874) பேரோன் எட்வார்ட் ஸ்டான்லியின் (Edward Stanley, 2nd Baron Stanley of Alderley,) மகளாவார். ரசலின் பெற்றோர்கள் அக்காலத்தில் மிக முற்போக்கான கொள்கையுடையவர்களாக இருந்தனர். இவரின் தந்தை வைகௌண்ட் ஆம்பர்லி ஓர் உயிரியலாளர்; இறைமறுப்புக் கொள்கை கொண்டவர்; தன் மனைவி தம் பிள்ளைகளின் ஆசிரியர், டக்ளஸ் ஸ்பால்டிங்கோடு காதல் கொண்டபோது அதனை இயல்பாய் மதித்தார். இருவரும்,அக்காலத்தில் நடத்தை பிறழ்வாக கருதப்பட்ட குடும்பகட்டுப்பாடு என்ற கொள்கைக்கு முதன் ஆதரவாளர்களாய் இருந்தனர்.
பிரித்தானியாவின், பயன்பாட்டுவாதத் தத்துவவாதியான ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் ரசலின் மானசீக ஆசானாவார். ரசல் பிறந்த அடுத்த வருடம் மில் இறந்து விட்டாரெனினும், மில்லின் எழுத்துகள் ரசலிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
ரசலுக்கு பிராங்க் என்ற சகோதரனும் ரெய்சல் என்ற சகோதரியும் இருந்தனர். ஜூன் 1874ல், ரசலின் அன்னை டிப்தீரியாவினால்க் மரணமடைந்தார். பின்னர் அடுத்தடுத்து சகோதரி ரெய்சலும்,நீண்ட கால மனச்சோர்வு காரணமாக ரசலின் தந்தையும் இறந்தனர். எனவே பிராங்கும், ரசலும் ஆழ்ந்த விக்டோரிய கலாசாரவாதிகளான பாட்டன் - பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டனர். அவர்கள் லண்டனின் மேற்குப் பகுதியிலிருந்த ரிச்மண்ட் பார்க] எனுமிடத்திலுள்ள மாளிகையான பெம்பிரோக் லாட்ஜில் வசித்தனர். 1878ல் அவருடைய பாட்டனும் இறந்ததால் பாட்டி மட்டுமே ரசலின் குடும்பத்தின் தூணாக இருந்தார். பாட்டி மத விடயங்களில் கட்டுப்பாடானவராகவும் பழமையாளராகவும் இருந்தாலும், மற்ற விடயங்களில் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையையும் அயர்லாந்து சுயாட்சியையும் ஆதரித்தார்.
ரசலின் சமூக நீதி மனப்பான்மையும், தன் கொள்கைகளை விட்டுத் தராத பண்பும் பாட்டியின் தாக்கங்கள்- பாட்டிக்கு பிடித்த பைபிள் மொழி “நீ கும்பல்களை பின்பற்றி தீங்கு செய்யாதே“ என்பது அவருடைய தாரக மந்திரம் ஆயிற்று. பெம்புரோக் லாட்ஜின் சூழ்நிலை, அடிக்கடி ஜெபங்களும், உணர்ச்சி அடக்குமுறையும், சடங்கு முறையில் மூழ்கியதுமாக இருந்தது; பிராங்க் இந்த நிலைக்கு வெளிப்படையான கிளர்ச்சியுடன் செயல்பட்டார்; சிறுவயதேயான பெர்ட்ராண்ட் தன் உணர்சிகளை ஒளிக்கக் கற்று கொண்டார்.
ரசலின் இளமைப் பருவம் மிகத் தனிமையாக இருந்தது, அதனால் பல தடவை தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். தன் சுய சரிதையில் தன் அதீத விருப்பங்கள் பால் உணர்சிகள், மதம், கணிதம் எனவும், கணிதத்தை பற்றி மேலும் மேலும் அறிய வேண்டுமென்ற ஆவல்தான் தற்கொலையில் இருந்து தன்னைத் தடுத்தது எனவும் கூறுகிறார். வீட்டிலேயே ரசலுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் தமயன் பிராங்க், ரசலுக்கு யூக்ளிட்டின் கணிதத்தை அறிமுகம் செய்து வைத்தார்; அது அவர் வாழ்க்கையை உருமாற்றியது.
ரசலுக்கு கணக்கு படிப்பதற்கு கேம்ப்ரிட்ஜ்,டிரினிடி கல்லூரியில் உதவித் தொகையுடன் 1890இல் தனது கணிதக் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஜி.இ.மூர் மற்றும் ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் முதலியவர்களின் நட்பைப் பெற்றார். விரைவிலே கணிதம், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றார். 1983இல் இளங்கலைப் பட்டமும், 1895ல் பெல்லொஷிப்பும் பெற்றார்.
ரசல் முதலில் அமெரிக்க குவேகர் ஆலிஸ் பியர்சல் ஸ்மித்தை 17ஆம் வயதில் சந்தித்தார். பியர்சல் ஸ்மித்தின் குடும்பத்திற்கு நண்பரானார் - அவர்களுக்கு ரசல் `லார்ட் ஜானின் பேரன்` என்றே தெரியும் , அதனால் ரசல் தங்களுடன் இருப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். அவர்களுடன் ரசல் பாரிஸ் பொருட்காட்சி, ஈபல் கோபுரம் எனப் பொழுதைக் கழித்தார். இது அக்காலத்தில் அரிதான ஒன்றாகும்.
ரசல் ஆலிஸ் என்ற பெண்மனியுடன் காதலில் விழுந்தார், தன் பாட்டிக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளை டிசம்பர் 13, 1894 அன்று மணம் புரிந்தார். 1901 பிறகு அவர்கள் மனம் கசந்து போயிற்று, முடிவில், 1921ல், பல நாட்கள் பிரிவுக்கு பிறகு , மணரத்து செய்தனர். அக்காலங்களில் ரசல் பல பெண்களுடன் உறவில் இருந்தார். அவர்களில் லேடி ஆட்டோலின் மொரலும், நடிகை லேடி கான்ஸ்டன்ஸ் மேலசனும் குறிப்பிடத் தக்கவர்கள்.
1896ல் ரசல் "ஜெர்மன் சமுதாய மக்களாட்சி" என்ற தனது அரசியல் ஆய்வு நூலைப் பதிப்பித்தார். வாழ்க்கை முழுவதும் அரசியல் மற்றும் சமுதாய கோட்பாடுகளில் ஆர்வம் செலுத்தினார். 1896ல் , ஜெர்மன் சமுதாய மக்களாட்சி பற்றி ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எகொனாமிக்ஸ்”என்ற கல்லூரியில் பாடம் கற்பித்தார், அங்கேயே அதிகாரம் பற்றிய அறிவியல் பற்றி 1937ல் உரையாற்றினார். 1902ல் சிட்னி மற்றும் பியட்ரிஸ் வெப் ஆகியோர் தொடங்கிய "கோ-எபீசியண்ட் டைனிங் கிளப்" என்ற மன்றத்தில் அங்கத்தினரானார்.
1905ல், மைண்ட் என்ற தத்துவ இதழில் இவருடைய கட்டுரை `ஆன் டிநோடிங்` (On Denoting) வெளியானது. 1908ல் ராயல் கழகத்தின் உறுப்பினர் ஆனார். ஒயிட்ஹெட்டுடன் சேர்ந்து எழுதிய `கணித கோட்பாடுகள்(Principia Mathematica) என்ற நூலை எழுதினார். 1910ல் 'கணிதத்தின் அணுகுமுறை' என்ற மற்றொரு நூலை வெளியிட்டார். இவ்விரு நூல்களும், கணிதத்தில் ரசலுக்கு மிகப் புகழைத் தேடித் தந்தன. 1911ல் ஆஸ்திரியப் பொறியியல் மாணவர் லூட்விக் விட்கன்ஸ்டைனுடன் நட்பானது. அவனை பெரும் மேதை எனவும், தனது தருக்க அறிவியலின் வாரிசு எனவும் ரசல் கருதினார். பல நேரம் விட்கன்ஸ்டனின் பல மனபீதிகளையும், மனச்சோர்வையும் குறைக்க முயற்சி செய்தார். அவனுடன் பல நாட்கள் கழித்தாலும், அவனால் ஈர்க்கப்பட்டு, அவனது கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவித்தார். அந்த ஊக்குதலில் 1922ல், 'டிராக்டடஸ் லாஜிகோ-பிலசாபிகஸ்'(தருக்க தத்துவத்தின் ஏடு) என்ற நூலை விட்கன்ஸ்டைன் வெளியிட்டார்.
அதுபோல, முதல் உலகப் போரின் போது, ரசல் அமைதிவாதச் செயல்களில் ஈடுபட்டார், 1916ல் நாட்டு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாக தீர்ப்பானபின், டிரினிடி கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு குற்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு அவரை பிரிக்ஸ்டனில் சிறைவாசம் செய்யவைத்தது. செப்டம்பர் 1918 அன்று ரசல் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
ஆகஸ்த் 1920ல், அவர் பிரித்தானிய அரசு ரஷ்யாவிற்கு ரஷ்ய புரட்சியின் விளைவுகளை பரிசீலனை செய்யும் அதிகாரபூர்வ குழுவின் உறுப்பினராக சென்றார். லெனினை சந்தித்தார். ரசல் ரஷ்யாவில் இருக்கும்போது டோரா பிளெக் என்ற பெண்மனியைச் சந்தித்தர். இருவரும் காதல் கொண்டனர். ரஷ்யப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் சீனா சென்ற ரசல் பீஜிங்கில் ஒரு வருடம் தத்துவ உரைகள் ஆற்றினார். சீனத்தில் ரசல் நிமோனியா பீடித்து படுக்கையில், அவர் இறந்ததாக ஜப்பானிய இதழ்கள் தவறான செய்தியைக் கொடுத்தன.பின் ரசலும் டோராவும் ஜப்பான் சென்றனர். ஜப்பானிலிருந்து திரும்பி வருகையில் டோரா “பெர்ட்ராண்ட் ரசல், ஜப்பானிய பதிவுகள் படி இறந்து விட்டதால், ஜப்பானிய ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுக்க முடியவில்லை” என அறிக்கை விட்டார். ஜப்பானிய ஊடகங்கள் அந்த நையாண்டியை புரிந்து கொள்ளமல் தத்தளித்தன.
ரசல் டோராவுடன் இங்கிலாந்துக்கு திரும்பியது. தனது முன்னாள் மணைவி ஆலிசை ரசல் ஆலிசுடன் மணரத்து செய்து, ஆறு நாள் கழித்து, டோராவை 27, செப்டெம்பர், 1921 ல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு ஜான் கோன்ராட் ரசல், காதரீன் ஜேன் ரசல், ஆகிய இரு குழந்தைகள் பிறந்தனர். ரசல் அச்சமயம் வாழ்வியல் தேவைகளுக்காக புவியியல், நெறியியல், கல்வி பற்றிய புத்தகங்கள் எழுதினார். ரசல் டோரவுடன் இணைந்து 1927ல் பெகன் ஹில் உயர்நிலைபள்ளியை நிறுவினார். இப்பள்ளியை டோரா 1943 வரை நடத்தினார்.
ரசலின் அண்ணன் பிராங்கின் 1931இல் இறந்த பின்பு, ரசல் 3வது ஏர்ல் ரசல் ஆனார். ரசலின் டோராவுடனான திருமண உறவு முறிந்து 1932ல் அவர்கள் பிரிந்தனர். அதன் பிறகு மணரத்து செய்தார்கள். ஜனவரி 18, 1936ல், ரசல் மூன்றாவது தடவையாக பட்ரீசியா ஸ்பென்ஸ் என்ற ஆக்ஸ்போர்டு இளநிலை மாணவியைத் திருமணம் செய்தார். பட்ரீசியா, ரசலின் குழந்தைகளுக்கு தாதியாக 1930ல் முதல் இருந்தவர். இவர்களுக்குப் பிறந்த மகன் தான் கோன்ராட் செபாஸ்டியன் ராபெர்ட் ரசல். இவர் 5 வது ஏர்ல் ரசல் ஆனார். அவர் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார். பின்பு லிபரல் ஜனநாயக கட்சியில் பெரும் புள்ளி ஆனார்.
இரண்டாவது உலகப் போரின் போது ரசல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார் பின்பு கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. அதற்காக ரசல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். பின்புநியூ யார்க் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார், ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அப்பணியை இழந்தார். பத்து வருடத்துக்கு முன் `மணமும் நெறியும்` என்ற தனது நூலில் ரசல் எழுதிய பாலியல் பற்றிய நெறிகள் இதற்குக் காரணமாயின. அதன் பின்னர் ரசல் பார்ன்ஸ் அறக்கட்டளையில் இணைந்து தத்துவத்தில் வரலாறு பற்றி உரையாற்றினார். இந்த உரைகள் மேற்கு தத்துவத்தின் வரலாறு எனப் புகழ்பெற்றன. ஆனால், இதன் தலைவர் பார்ன்சுடன், சண்டையிட்டு, இங்கிலாந்து திரும்பிய ரசல் டிரினிடி கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்.
1940, 1950 களில் அவர் பிபிசியில் பேசிய பிறகு கல்லூரி வட்டங்களுக்கு வெளியே மிக்க புகழ் பெற்றவராக விளங்கினார். ஊடக கட்டுரைகளில் பாத்திரமாகி, உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் அவருடைய கருத்துகள் கேட்கப்பட்டன. அக்டோபர் 1948ல் ட்ராண்ட்ஹைம் போகும் வழியில் விமான விபத்து ஏற்பட்டு, உயிர் தப்பினார். இவருடைய நூல் `மேற்கின் தத்தவத்தின் வரலாறு` நல்ல விற்பனையாகி, வாழ்நாள் வரை தேவையான வருமானத்தைக் கொடுத்தது.
1948ல் ஒரு பேச்சில் , அப்பொழுது அமெரிக்க நாடுகள் மட்டும் தான் அணுகுண்டை கைவசம் வைத்திருந்தன., சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு செயல்களைச் செய்து , அந்நாடுகளை தன் செல்வாகில் வைக்க முயற்சித்தது. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு தொடர்து நடந்தால், அது அணுகுண்டினை கையெடுக்கும் முன்பே அதனுடன் யுத்தம் இடுவது சிறந்த வழி என ரசல் கருதினார். ஏனெனில் சோவியத் யூனினிடம் அணுகுண்டு இல்லாமலிருந்தால் மேற்கின் வெற்றி சுலபமாக கிடைத்து, போரின் போது அழிவுகள் குறைவாக இருக்கும் என்பது ரசலின் கருத்து. பலர் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு ரசல் அணுகுண்டு முதல் பிரயோகத்தை ஆலோசிக்கிறார் என நினைத்தனர்.
ஜூன் 9, 1949 அன்று, அரசரின் பிறந்தநாள் விழாவில், அவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் கொடுக்கப் பட்டது. அடுத்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது.
1952ல், ரசல் பட்ரீசியாவை மணரத்து செய்து நான்காவது முறையாக ஈடித் ஃபின்ச் என்பவரை 15 டிசம்பர் 1952 அன்று மணந்தார். அவர்களுக்குள் 1925 முதல் நட்பு இருந்தது . ஈடித், ரசலின் மரணம் வரை அவருடன் வாழ்ந்தார், அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாம். ரசலின் மூத்த மகன் ஜான் மூளை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ரசலுக்கும் ஜானின் அம்மா டோராவிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜானின் மனைவி சூசனும் மூளை நோய்க்கு உட்பட்டார். அதனால் ரசலும், ஈடித்தும் ஜானின் மூன்று பெண்களுக்கும் சட்டரீதியில் காப்பாளார்கள் ஆயினர். அதில் இரண்டு பெண்கள் பிற்காலத்தில் ஷிசோபிரெனியாவினால் பீடிக்கப் பட்டனர்.
ரசல் தன் வரலாற்று நூலை மூன்று தொகுதிகளாக ஆகிய வருடங்களில் 1967,1968,1969 களில் வெளியிட்டார். உடல்நிலை தளர்ந்தாலும், இறுதி வரை தெளிவான மனத்துடனும், சிந்தனையுடனும் இருந்தார். 23 நவம்பர் 1969 அன்று த டைம்ஸ் செய்திதாளுக்கு செகோஸ்லாவாக்கியாவில் நடைபெற இருக்கும் போலி குற்றச்சாட்டு நீதிமன்ற வழக்குகள் மிகவும் கவலை தருபவை என எழுதினார். அதே மாசம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயளாளர் ஊ தாண்டுவுக்கு, அமெரிக்கா வியத்நாமில் செய்த சித்திரவதை, இன அழிப்பு பற்றி ஒரு சர்வதேச குற்ற விசாரணை மன்றம் ஏற்படுத்த வேண்டும், என கேட்டுக் கொண்டார். அடுத்த மாசம், சோவியத் பிரதமர் அலெக்சி கோசிஜனிடம், எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தனை வெளியேற்றுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.. 31, ஜனவரி 1970 அன்று ரசல் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தரை ஆக்கிரமிப்பை கண்டித்து, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனிய நிலங்களில் இருந்து விலகி வரவேண்டும் என கோரிக்கை இட்டு அறிக்கை வெலியிட்டார். அதுதான் ரசலின் வாழ்க்கையிலேயே கடைசி அரசியல் செய்கையாகும்.
ரசல் இன்ப்ளுவென்சா சுரத்தினால், வேல்சில் உள்ள தன் வீட்டில் 2ம் பிப்ரவரி, 1970ல், இறந்தார். அவரின் விருப்பப்படி அவர் உடல் ஒரு மத சடங்குகளும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் வேல்ஸ் மலைகளின் மீது தெளிக்கப்பட்டது.
