பூக் கொய் படலம் - 985
மகளிர் பூங்கொடிகளை அலங்கரித்தல்
985.
பூ எலாம் கொய்து கொள்ள.
பொலிவு இல துவள நோக்கி.
‘யாவை ஆம் கணவர் கண்ணுக்கு?
அழகு இல இவை’ என்று எண்ணி.
கோவையும். வடமும். நாணும்.
குழைகளும். குழையப் பூட்டி.
பாவையர். பனி மென் கொம்பை
நோக்கினர். பரிந்து நிற்பார்.
பூ எலாம் கொய்து கொள்ள - (பூங்கொடியில் உள்ள)
பூக்களையெல்லாம் கொய்துவிட்டமையால்; பொலிவு இல துவள
நோக்கி - (பூக்களையிழந்தமையால் அப்பூங்கொடிகள்) அழகு இழந்து
துவண்டு நின்றமையைப் பார்த்து; பாவையர் - சித்திரப் பாவையை
ஒத்த மகளிர்; இவை - (அழகிழந்த) இப் பூங்கொடிகள்; கணவர்
கண்ணுக்கு யாவை ஆம்? - கணவர்களுடைய கண்களுக்கு எப்படித்
தோன்றும்; என்று எண்ணி - என்று கருதி; கோவையும் வடமும்
நாணும் குழைகளும் - (தாங்கள் அணிந்திருந்த) மணிமாலைகளையும்.
முத்து வடங்களையும். அரைவடங்களையும். காதணிகளையும்;
குழையப் பூட்டி - (அவை கனத்தால்) துவளும்படி அணிவித்து;
பனிமென் கொம்பை - குளிர்ந்து மெல்லென்றிருக்கும்
அப்பூங்கொம்புகளை; பரிந்து நோக்கினர் நிற்பர் - விருப்பத்தோடு
பார்த்து நிற்பார்கள்.
பூங் கொடிகளின் அழகு பூக்களில் அடங்கியுள்ளமையால். “பூ
எலாம் கொய்து கொள்ளப்பொலிவில” என்றார். கணவன்மார்
கண்களுக்கு இனிமை சேர்ப்பதனையே. தம் வாழ்வின்
பெரும்பயனாகவும் இலக்காகவும் கொண்டு அம் மகளிர் வாழ்ந்தனர்
என்பது தோன்ற. “யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல
இவை?” என்றார். கணவர் கண்கட்கு அழகும் இனிமையும் தர.
எத்துணை அரிய பொருள்களையும் கொடுக்கலாம் என்பது விளக்க.
“கோவையும்வடமும் நாணும் குழைகளும் குழையப் பூட்டி” நின்றனர்
அம்மகளிர் என்றார். அவ்வரிய அணிகளை அக்கொடிகள் பாரம்
பொறாமல் வளையும் அளவிற்குப் பூடடினர் என்பார். “குழையப்
பூட்டி” என்றார். பூட்டியபின் அவை அவை அழகு பொலிய நின்றன
என்பதை. “பரிந்து நோக்கினர் நின்றார்” என்பதனால் உணர்த்தினார்.
“நோக்கினர் பரிந்து நின்றார்” என்பது பரிந்து நோக்கினர் நின்றார்
என மாற்றிக் கூட்டப்பட்டது. கணவனை இன்புறுத்தவே அக்கால
மகளிர் அணி அணிந்தனர்; வாழ்ந்தனர் எனும் அருங்கருத்தினைப்
பூங்கொடி மேலிட்டுப் புலப்படுத்திய திறம் காண்க. “கட்கினியாள்;
காதலன் காதல் வகை புனைவாள்......பெண்” (நாலடி. 384). 11
