பூக் கொய் படலம் - 977

bookmark

அனைவரும் சோலை சேர்தல்

உச்சிவேளையில் சோலையைச் சார்தல்
 
977.

அடைந்து. அவண்இறுத்த பின்னர்.
   அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு.
   மன்னவரும். மைந்தர்தாமும்.
குடைந்து வண்டு உறையும்
   மென் பூக் கொய்து நீராட. மை தீர்
தடங்களும். மடுவும் சூழ்ந்த.
   தண் நறுஞ் சோலை சார்ந்தார்.
 
அவண்     அடைந்து இறுத்த பின்னர் - அச்சோணை யாற்றின்
கரையில்  அச்சேனைக்  தொகுதி தங்கிய பின்பு; அருக்கனும் உம்பர்ச்
சேர்ந்தான்   -   சூரியனும்   வான்  மேல்  ஏறினான்;  மடந்தையர்
குழாங்களோடும்  -  (தத்தம்) மனைவியர் கூட்டங்களோடு; மன்னரும்
மைந்தர்தாமும்  -  அரசர்களும்  இளவரசர்களும்;  வண்டு குடைந்து
உறையும்  மென்பூக்  கொய்து  -  வண்டுகள் துளைத்துத் திளைக்கும்
மெல்லிய  மலர்களைப்  பறித்து;  நீராட - (நீரில்) மகிழ்ந்து விளையாட;
மைதீர்   தடங்களும்  மடுவும்  -  தூய  தடாகங்களும்  மடுக்களும்
சுற்றியுள்ள;  தண் நறுஞ் சோலை சார்ந்தார் - குளிர்ச்சியும் மணமும்
மிக்க சோலையினை அடைந்தனர். 

வண்டுகள்     மலரைக்  குடைந்து தேன் ஆடல் கண்டு இவர்களும்
தடாகங்களைக்  குடைந்து   நீராடும்  நினைவுற்றனர்.  என்பது  குறிப்பு.
தடம்:  அகன்று பெரிதான நீர்நிலை. மடு: ஆழ்ந்து  சிறிதான  நீர்நிலை.
நீராடுங்காலை.  மலர்களைப்  பறித்து  வந்து.   ஒருவர்  மேல்  ஒருவர்
இலக்குத் தவறுதல் இன்றி வீசி விளையாடுதல் நீர்  விளையாட்டு  எனத்
தெரிகிறது.                                                 3