பல்லவர்கள்

bookmark

முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் அவரது மகன் மாமல்ல முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் தோற்றத்துடன் ஏழாம் நூற்றாண்டு முதல் பல்லவர்களின் ஆட்சியை தமிழ்நாடு கண்டது. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி அடையாளம் காணப்படவில்லை. சாதவாகனர் அரசர்களின் செயல் அலுவலர்களாக பல்லவர்கள் இருந்தார்கள் என்று அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்கு பின்பு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் பல்லவர்கள் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் தக்காணப் பீடபூமியை ஆட்சி செய்த விஷ்ணுகுண்டினா என்பவருடன் திருமண உறவும் கொண்டிருந்தனர். சுமார் கி.பி 550 ஆண்டுவாக்கில் சிம்மவிஷ்ணு என்ற அரசனின் ஆட்சிக்காலத்திலேயே பல்லவர்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கினர். சோழர்களை அடிமைப் படுத்தி தெற்கு பகுதியில் உள்ள காவேரி ஆறு பகுதிகள் வரை பல்லவர்கள் ஆட்சி செய்தனர்.

முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் பல்லவர்கள் சிறப்பாக இருந்தனர். காஞ்சிபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளை பல்லவர்கள் ஆட்சி செய்தனர். பல்லவர்கள் காலத்தில் திராவிடக் கட்டடக்கலை உயரிய நிலையில் இருந்தது.[சான்று தேவை] யுனெஸ்கோவினால் (UNESCO) உலகப் பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்ட கடற்கரைக் கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் அரசனால் கட்டப்பட்டது. சீனாவில் உள்ள பௌத்த மதத்தின் கொள்கையான சென் பிரிவை நிறுவிய போதி தர்மர் என்பவர் பல்லவ வம்சத்தின் இளவரசர் என்று பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன.

வாதாபியை மையமாகக் கொண்டு ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர் குலம் தக்காண பீடபூமியின் மேற்கு பகுதியில் எழுச்சியடைந்தது. முதலாம் மகேந்திரவரமன் ஆட்சி காலத்தில் இரண்டாம் புலிகேசி (Bc.610–642) என்பவர் பல்லவ பேரரசின் மீது படையெடுத்தார். மகேந்திரவர்மனின் அடுத்தவரான நரசிம்மவர்மன் சாளுக்கியர் மீது திடீரென படையெடுத்து அவற்றைக் கைபற்றி வாதாபியை தனது வசமாக்கிக் கொண்டார். சாளுக்கியர் மற்றும் பல்லவர்களுக்கு இடையே இருந்த பகை 750 ஆம் ஆண்டில் சாளுக்கியர்கள் மறையும் வரை சுமார் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தது. சாளுக்கியர்களும் பல்லவர்களும் பலமுறை சண்டையிட்டுள்ளனர். பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரம் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் விக்ரமாதித்யா என்ற அரசனால் கைப்பற்றப்பட்டது. இரண்டாம் நந்திவர்மன் நீண்ட ஆட்சிக் காலத்தைக் (732–796) கொண்டிருந்தார். 760 ஆம் ஆண்டில் கங்கைப் பேரரசைக் (தெற்கு மைசூர்) கைப்பற்ற பயணம் செய்த படைகளுக்கு இரண்டாம் நந்திவர்மன் தலைமை தாங்கினார். பல்லவர்கள் பாண்டியர்களுடனும் தொடர்ச்சியாக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் எல்லைப் பகுதி காவேரி ஆற்றின் கரைபபகுதிகள் வரை பரவியது. இவர்களைப் பற்றி இன்னும் விரிவாகக் காண்போம் வாருங்கள்.