பதினோராம் அத்யாயம்
( களவு மற்றும் பாலியல் சம்மதமான குற்றங்களும் அதனைச் சார்ந்த விசாரணை முறைகளும், அதற்க்கான தண்டனை முறைகளும் )
குற்றங்களை விசாரிப்பததைப் பற்றி அர்த்தசாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது.
அதாவது ஒருவர் குற்றம் செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களோடு பிடிபட்டால் அன்றி ஒருவரைக் கைது செய்யக் கூடாது. அப்படியே , பிடிபட்ட ஆயுதங்கள் உடன் கைது செய்யப் பட்டாலுமே சரியான சாட்சியங்கள் இல்லாமல் அவரைத் தண்டிக்கக் கூடாது. அப்படியே சரியான சாட்சியங்கள் இருந்தாலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே தண்டிக்க வேண்டும். அதிலும் குற்றத்தை விசாரணை செய்ய தண்டத்தை கையில் எடுத்தாலும் ( அதாவது அடித்து விசாரிப்பது ) கூட , அதற்காக கீழ்க்கண்ட நபர்களைத் துன்புறுத்தக் கூடாது
1.சில்லறை குற்றத்தில் சந்தேகத்தின் படி கைது செய்யப் பட்டவர்கள் .
2.வயதுக்கு வராதவர்கள் ( சிறுவர், சிறுமியர்) .
3.முதியவர்கள்.
4.நோயாளிகள்.
5.பலவீனமானவர்கள்.
6.மது அருந்தியவர்கள்.
7.பித்து பிடித்தவர்கள்.
8.நீண்ட பயணத்துக்குப் பிறகு பசி, தாகம், களைப்பில் அவதிப்படுபவர்கள்.
9.அதிக அளவில் உணவு உண்டவர்கள்.
10.கர்பிணிகளும், குழந்தைப் பிரசவித்து ஒரு மாதமே ஆனவர்களும்.
ஆகிய மேற்கண்டவர்களை சித்திரவதை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது என்று கௌடில்யர் கூறுகிறார் . அவ்வாறு துன்புறுத்துதல் அந்நாட்டு அரசனின், தர்மத்துக்கு இழுக்கு என்று எடுத்துரைக்கிறார்.
1.கொடிய குற்றவாளிகளைக் கூட ஒன்று விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் , அனுமதிக்கப்பட்ட நாட்களில் ஒருமுறை மட்டுமே துன்புறுத்தலாம். அதே சமயத்தில் , சித்திரவதை மரணத்தை விளைவித்து விடக் கூடாது. அப்படி நேர்ந்தால் , அதற்குப் பொறுப்பாளர் யாரோ அவர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார் என்று கௌடில்யர் மேலும் விளக்குகிறார். கீழ்க்கண்ட வகையினரை துன்புறுத்துவதில் தவறில்லை என்றும் கௌடில்யர் ஒரு பட்டியலை தருகிறார். அவை பின்வருமாறு.
2.செய்த குற்றத்தையே திரும்பவும் செய்பவர்கள்.
3.திருட்டு அல்லது கொள்ளை நிகழ்த்தும் பொழுது பிடிபட்டவர்.
4.திருட்டுப் பொருள்களுடன் பிடிபட்டவர்.
5.கருவூலத்தைக் கொள்ளை இட முயற்சிப்பவர்.
6.சித்திரவதை மூலம் கொள்ளப்பட, அரசனால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்.
ஆகிய மேற்கண்டவர்களை கீழ்க்கண்ட முறைகளில் சித்திரவதை செய்யலாம் என்றும் எடுத்துரைக்கிறார். அச் சித்திரவதை செய்யும் முறைகள் பின்வருமாறு:
1.உள்ளங்கால்களில் , கைகளை பின்னால் கட்டிய படி உண்மை வரும் வரை பிரம்பால் அடிப்பது .
2.உடலில் உள்ள தோல் கிழிந்து தொங்கினாலும் உண்மை வரும் வரை சவுக்கால் அடிப்பது.
3.தலைகீழாகத் தொங்கவிட்டு, நெருப்பு மூட்டி மிளகாயை அதில் இடுதல் .
4.நகக் கண்களில் ஊசியால் குத்துதல் அல்லது நகங்களை பிடுங்கி எறிதல்.
5.உச்சி வெயிலின் சமயத்தில் குற்றவாளியிடம் உண்மையை கொண்டு வர , அவனை அரை நிர்வாணப்படுத்தி கொதிக்கும் பாறையில் மாலை நேரம் வரும் வரை கட்டி வைத்தல்.
6.இரண்டு கால்களுக்கும் இரண்டு குதிரைகளைக் கட்டியும் , அது போல இரண்டு கைகளுக்கும் இரண்டு குதிரைகளைக் கட்டியும் வேகமாக இழுக்கச் செய்தல்.
போன்ற சித்திரவதைகளை, மிகக் கொடிய குற்றவாளிகளுக்கு அளிப்பதில் தவறில்லை என்கிறார் சாணக்கியர்.
அதுபோல, கீழ்கண்ட குணம் அல்லது செய்கைகளைக் கொண்டவர்களை எப்பொழுதும் நம்பிவிடக் கூடாது என்றும் , அவர்கள் மீது கண் வைப்பதும் தேவைப்பட்டால் சந்தேகப்படி அவர்களை கைது செய்வதிலும் எந்தத் தவறும் இல்லை என்கிறார் சாணக்கியர். அந்த நபர்களின் பட்டியல் பின்வருமாறு :
1.தவறான இடம், குலம், கோத்திரம் , பெயர் அல்லது தொழிலைக் காட்டி ஏமாற்ற முயல்பவர்கள்.
2.தமது தொழிலை மறைப்பவர்.
3.இறைச்சி , மது, விருந்து, நறுமணப் பொருள்கள், மாலைகள், உடைகள், ஆபரணங்கள் இவற்றில் ஊதாரித்தனமாய் செலவிடுபவர்கள்.
4.தன்னுடைய நேரத்தைக் குடிப்பதிலும், சூதாட்ட விடுதியிலும் , தவறான பெண்ணுடனும் செலவிடுபவர்.
5.அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்.
6.தம்முடைய இருப்பிடம், பயணம் இவற்றை இரகசியமாய் வைத்திருப்பவர்.
7.காடு , மலை போன்ற தனிமையான இடங்களுக்கு வழக்கமில்லாத நேரத்தில் செல்பவர்.
8.இரகசியமான அல்லது சந்தேகத்துக்கூரிய இடங்களில் கூட்டங்கள் நடத்துபவர்.
9.காயத்துக்கு இரகசியமாய் சிகிச்சை செய்து கொள்பவர்கள் .
10.பிறரின் சந்திப்பை தவிர்ப்பவர்கள்.
11.பிறரது செல்வம், வீடு பற்றி அறிவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள்.
12.தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருப்பவர்.
13.துறவிபோல நடிப்பவர்கள்.
14.முன்பு குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டவர்.
15.உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் ஓடவோ, மறைந்து கொள்ளவோ முயற்சிப்பவர்கள்.
16.அடிக்கடி முகம் அல்லது குரலை மாற்றிக் கொள்பவர்கள்.
17.குழப்பமான நிலையில் சந்தேகத்துக்கு இடமாய் செயலாற்றுபவர்கள்.
18.அதிக சுமையை தேவை இல்லாமல் சுமந்து செல்பவர்கள்.
19.உடல் நலம் அற்றவர் போல நடிப்பவர்.
20.விலைமதிப்பற்ற பொருள்கள் , கடிதங்கள், ஆயுதங்கள், தீயை உண்டாக்கும் பொருள்கள் அல்லது விஷம் போன்றவற்றை இரகசியமாய் எடுத்துச் செல்பவர்கள் அல்லது நீண்ட தூரத்துக்கு அனுமதிச் சீட்டின்றி பயணம் செய்பவர்கள்.
மேற்கண்ட இவர்களை நம்புதல் கூடாது.
களவிற்கான விசாரணைசெய்யும் முறைகள்:
1.வீட்டைக் கொள்ளையிடுதல் வெளியில் இருந்தோ, உட்புரமாகவோ இருவகையிலும் நடைபெறலாம் . கதவுகளைத் தவிர பிற வழிகள் , கதவு உடைப்பு, துளையிடப்பட்ட கதவு, உடைந்த சாளரங்கள், கூரையின் மூலம் நுழைவதற்கு ஏற்படுத்திய வழி, ஏறவோ இறங்கவோ சுவரில் அமைக்கப்பட்ட அடையாளங்கள். திருட்டுப் பொருள்களை புதைக்கவோ , எடுத்துச் செல்லவோ முயன்ற தடயங்கள் இவற்றைச் சோதனையிடுவதன் மூலம் திருடன் உள்ளே நுழைந்த அல்லது வெளியே சென்ற வழியைக் கண்டறியலாம். உடைக்கவோ அறுக்கவோ பயன்படுத்திய ஆயுதங்கள் வீட்டின் உட்புறத்தில் காணப்படுமெனில் திருட்டு வீட்டின் உள்ளேயே நடந்திருக்கும். இல்லையெனில் அது வெளிப்புறம் இருந்து நடத்தப்பட்ட திருட்டாக இருக்கும். இருபுறங்களிலும் கிடைக்கக் கூடிய தடயங்களில் இருந்து வீட்டின் உட்புறமும், வெளிப்புறமும் ஆட்கள் செயல்பட்டதை அறியலாம். வீட்டில் உள்ளவர்களில் எவரும் திருட்டில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிற போது பின் வருபவர்கள் விசாரனைக்கு உட்படுத்தப்படலாம். துர்க்குணம் கொண்ட நெருங்கிய உறவினர் , உண்மை அற்றவர்களோடு தொடர்புடையவர் அல்லது திருட்டு செய்ததற்கான கருவிகளோடு பிடிபடுபவர்.
2.அதே குணங்களைக் கொண்ட வேலைக்காரர்கள்.
3.ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லது குடும்பத்துக்கு வெளியில் காதலனை உடையவள்.
4.மிக அதிகமாய் அல்லது மிகக் குறைவாய் உறங்குபவர் , வெளிறிய முகத்தோடு அல்லது குழப்பமாய் தோற்றமளிப்பவர் , தெளிவற்ற குரலை உடையவர்.
5.உடலில் காயம் , உடையில் கிழிசலுடன் காணப்படுகிறவர் .
6.குற்றம் நடந்த இடத்தில் காணப்பட்ட அதே காலடியை உடையவர்.
மேற்குறிய அடையாளங்களுடன் காணப்படுபவர் திருடனாகவோ திருட்டுக்குத் துணை நின்ற நபராகவோ இருக்கலாம் . திருட்டு வீட்டுக்கு வெளியில் நடந்திருப்பின் சேகரித்த தடயங்களை வைத்து கிராமப்புறத்திலும் , நகர்ப்புறத்திலும் திருடனைத் தேடுவர்.
சந்தேகத்துக்கு உரியவர்களை கைது செய்து எவ்வாறு விசாரணை நடத்துவது:
திருட்டு நடந்து மூன்று இரவுகளுக்குப் பின் ஒருவரை ஆயுதமேதுமின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்தல் கூடாது. விரோதம் அல்லது வெறுப்பின் காரணமாய் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் . திருட்டு அல்லது கொள்ளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை குற்றம் சாட்டியவர் மற்றும் சாட்சிகள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், சொந்த ஊர், சாதி, குடும்பப் பெயர், தொழில், பொருளாதார நிலை, நண்பர்கள், உறைவிடம் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து , பிறகு மற்றவர்களிடம் விசாரித்து உண்மையை உறுதி செய்து கொள்ளலாம்.
குற்றம் நடந்த அன்று குற்றவாளி என்ன செய்து கொண்டிருந்தார். கைது செய்யப்படும் வரை எங்கிருந்தார் போன்றவை அவரிடம் விசாரித்து அறியவேண்டியது. அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இருந்தால் அவரை விடுதலை செய்து விட வேண்டும். இல்லையேல் அவரைத் துன்புறுத்தலாம் . சந்தேகம் உறுதி செய்யப்பட்ட நிலையில் , நிரூபிக்க உதவும் கீழ்க்கண்ட சான்றுகளான திருட்டுக் கருவிகள் , ஆலோசனை வழங்கியவர்கள் , திருடப்பட்ட பொருள்கள் போன்றவற்றை அளிக்குமாறு கேட்கலாம் . தடயங்கள் ஏதும் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றவாளி விடுவிக்கப்படலாம். அதை விட்டு , சித்திரவதையின் மூலம் ஒருவரைக் குற்றவாளியாய் அறிவிக்கக் கூடாது. மொத்தத்தில் , ஒருவருக்குத் தண்டனை அளிக்கும் முன் நம்பத்தக்க நிரூபணம் இருப்பது அவசியம் ஆகும்.
பாலியல் குற்றங்களான கற்பழிப்பு பற்றி கௌடில்யர் கூறுவது:
ஒரு விலை மாதுவைக் கூட அவளுடைய விருப்பமில்லாமல் புணரக் கூடாது. கூட்டாக நடைபெறும் கற்பழிப்பில் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தண்டனைத் தரப்பட வேண்டும்.
பாலியல் ரீதியாக தடை செய்யப்பட்ட உறவுகள் பற்றி கௌடில்யர் கூறுவது:
குருவின் மனைவியோடு உறவு வைத்துக் கொள்ளுதல் மன்னிக்கப்படாத குற்றமாகும். அதற்கு விமோசனமே கிடையாது. அதுபோல , ஒரு குருவும் தனது அனைத்து சிஷ்யர், அல்லது சிஷ்யையை மகனைப் போலவும், மகளைப் போலவும் பாவிக்க வேண்டும்.
பாலியல் குற்றங்களை செய்யும் பொழுது அளிக்கப்படும் தண்டனைகள் பற்றி கௌடில்யர் கூறுவது
1.அரசியுடன் உடலுறவு கொண்டு பிடிபடும் ஒருவன் உயிரோடு கொதிக்கும் நீரில் வேக வைத்து சாகடிக்கப் பட வேண்டும். அந்த அரசியும் அவ்வாறே சுண்ணாம்புக் காளவாயில் வேக வைத்து சாகடிக்கப் பட வேண்டும்.
2.வயதுக்கு வராத பெண்ணை கர்ப்பழிப்பவனுக்கு ஆண் குறியை துண்டிப்பதுடன், அவன் 400 பணம் அபராதம் செலுத்துதல் வேண்டும். அல்லது அந்தப் பெண் விரும்பினால் அவளை மணக்கலாம்.
மேற்கண்டவைத் தவிர கௌடில்யர் காலத்து இதர தண்டனை வகைகள்
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திர்க்கு "தண்ட நீதி" என்ற ஒரு பெயரும் உண்டு. இதற்குக் காரணம் கௌடில்யர் காலத்தில் கடுமையான தண்டனைகள் அளிப்பதின் மூலம் சமூக ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. மக்களின் தவறான நடத்தை பொது இடங்களில் சேதம் விளைவித்தல் , நாட்டின் வருவாயில் இழப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றைத் தடுப்பதற்காகவும் வெறுப்பு, கழகங்கள், புரட்சிகளைத் தவிர்ப்பதர்க்க்காகவும் தான், மேற்கண்ட கடுமையான சட்டங்களைக் கௌடில்யர் இயற்றி உள்ளார. என்றாலும் தண்டனைகள் மிக எளிமையாகவோ , மிகக் கடுமையாகவோ இருக்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப தண்டனைகளை மாற்றலாம். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு எப்பொழுதும் கருணை காட்ட வேண்டும். அறியாமையில் செய்யப்பட தவறுகளுக்கு எளிய தண்டனைகளே வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிகளையும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் வரையறுத்து உள்ளார். அதன்படி பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளைத் திருடிச் சென்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால். குற்றவாளிக்கு சித்திரவதை அற்ற மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். நீர்நிலைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தினால், அதே நீர் நிலையில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை குற்றவாளிக்கு அளித்தல் வேண்டும் .
அரசனுடைய யானையைத் திருடுதல் அல்லது கொள்ளுதல் கழுவு மரத்தில் ஏற்றப்பட்டு குற்றவாளி கொல்லப்பட வேண்டும்.
