பகுதி ஒரு பரிதாப சம்பவம்
"பிரசித்தி பெற்ற செஞ்சிக் கோட்டையில் நேற்றுப் பௌர்ணமியன்று மிகவும் பரிதாபமான ஒரு சம்பவம் நடந்தது. அன்று இரவு அங்கேயுள்ள அம்மன் கோயிலுக்கு முன்னால், சுனையின் கரையில் ஒரு வாலிபனும், ஓர் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். அவர்கள் நஞ்சு அருந்தி உயிர் விட்டிருக்க வேண்டுமென்று வைத்திய பரிசோதனையில் வெளியாயிற்று.
இளைஞன் இவ்வூர் எலிமெண்டரி பாடசாலையில் உபாத்தியாயர். சமீபத்தில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்ததாம். காலஞ்சென்ற பெண் இவ்வூர் ஜமீன்தார் சேஷாசல ரெட்டியாரின் ஏக புதல்வி. இந்தப் பெண்ணுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் நடக்க ஏற்பாடாகியிருந்ததென்பது குறிப்பிடத் தக்கது. குமாரஸ்வாமி என்கிற அந்த இளைஞனும் இந்தப் பெண்ணும் பரஸ்பரம் காதல் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுடைய கல்யாணத்துக்கு ஜமீன்தார் சம்மதிக்காமல் வேறு பணக்கார இடத்தில் பெண்ணைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தபடியால் இந்த விபரீத சம்பவம் நேர்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. அந்த இளங் காதலர்களின் பரிதாப முடிவைக் குறித்து எல்லாரும் வருத்தப் பட்டாலும் 'இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட காதல் உண்டா?' என்று அதிசயத்துடன் பேசிக் கொள்கிறார்கள்..."
இந்தச் செய்தியைப் படித்ததும், சாதாரணமாய்க் கல் நெஞ்சனென்று பெயர் வாங்கிய என் கண்களிலிருந்து கலகலவென்று நீர் பொழிந்தது. அந்த இளங் காதலர்களின் அகால மரணத்தினால் விளைந்த துக்கத்துடன், "ஆகா! தமிழ்நாடு ஓர் அபூர்வ கதாசிரியனையல்லவா இழந்துவிட்டது!" என்று எண்ணியும் வருந்தினேன்.
அடப் பாவி! என்னிடம் மட்டும் கதை சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாதா? அப்படிச் சொல்லியிருந்தால், "அசட்டுப் பிள்ளை! காதல், பிரேமை என்பதெல்லாம் மூன்று நாள் பைத்தியம்! தேசத்துக்காக உயிரைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டு," என்று உபமான உபமேயங்களுடன் புத்தி சொல்லிக் காப்பாற்றியிருப்பேனே?
