நேச நாயனார்
"மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்" – திருத்தொண்டத்தொகை.
நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியார்களைக் காக்கவே செய்து வந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டிய முறையால் ஈந்து வந்து இறுதில் அதன் பயனாய் சிவனடி நிழல் சேர்ந்தார். நேசநாயனார் குருபூசை நாள்: பங்குனி ரோகிணி என்று அறியப்படுகிறது. சிவனடியார்களுக்கு உடை உதவுதலே சிறந்த சிவத்தொண்டு என்பதை இந்த அடியாரின் வாழ்கை மூலமாக நாமும் அறியலாம்.
