நாட்டுப் படலம் - 47
கோழிப்போர்
47.
கருப்புறு மனமும், கண்ணில்
சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி;
உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர்
மதுகைய, வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்
பொருத்துவாரும்;
கறுப்புறு மனமும்- சினம் மிகுந்த மனமும்; கண்ணில் சிவப்புறு
சூட்டும்- கண்களைவிடச் சிவந்த கொண்டையையும்; காட்டிப்-
புலப்படுத்தி; உறுப்புறு படையின் தாக்கி- காலில் கட்டிய கத்தியினால்
எதிர்க்கும் சேவலைத் தாக்கி; உறு பகை இன்றிச் சீறி- தமக்குள்
முன்பகை இல்லாமலே சினம் காட்டி; வெறுப்பு இல- போர் செய்வதில்
வெறுப்பு இல்லாதவனாய்; வீர வாழ்க்கை மறுப்பட- வீர வாழ்க்கைக்கு
மாசு உண்டாகுமாயின்; ஆவி பேணா - உயிரையும் பெரிதாகப்
போற்றாத; வாரணம் - சேவல்களை; பொருத்துவாரும்-
போரிடும்படிச் செய்பவர்களும்.....
கறுப்பு: சினம். ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்’ என்பது
தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 74). சூடு: சேவல் கொண்டை
உறுப்பு: இங்கே கால்களாகிய உறுப்பு. உறுப்புறு படை என்பதற்குக்
கால்களும் மூக்கும் ஆகிய உறுப்புகள் என்றும் கொள்ளலாம்.
‘காலாயுதம்’ என்றே சேவலுக்கு ஒரு பெயருண்டு. 16
