நாட்டுப் படலம் - 44
பண்ணைகளின் சிறப்பு
44.
சேல் உண்ட ஒண் கணாரின்
திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி,
வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி
கன்றுஉள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத்
தேரை தாலாட்டும் - பண்ணை.
பண்ணை- வயல்களில்; சேல் உண்ட ஒண் க(ண்)ணாரின்- மீன்
போன்ற கண்களை உடைய பெண்களைப் போல; திரிகின்ற செங்கால்
அன்னம்- திரிகின்ற சிவந்த கால்களை உடைய அன்னங்கள்; மால்
உண்ட நளினப் பள்ளி- பெருமையுடைய தாமரை மலர்களாகிய
படுக்கையில்; வளர்த்திய மழலைப் பிள்ளை- கிடத்திய
இளங்குஞ்சுகள்; கால் உண்ட சேற்று மேதி- காலில் ஒட்டிய சேறுடைய
எருமைகள்; கன்று உள்ளிக் கனைப்ப- (ஊரகத்து உள்ள) தம்
கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால்; சோர்ந்த பால் உண்டு-
தானே சொரியும் பாலை அருந்தி; துயில- உறங்க; பச்சைத் தேரை
தாலாட்டும்- பச்சை நிறத் தேரைகள் தம் ஒலியால் தாலாட்டுப்
பாடும்.
அன் நடையே பொதுவாக மகளிர் நடைக்கு உவமை கூறப்படும்;
இங்கே எதிர்நிலை உவமையாக மகளிர் போல் நடை பயிலும்
அன்னம் என வந்தது. அன்னம் தன் குஞ்சைத் தாமரை மலர்ப்
படுக்கையிலே கிடத்துகிறது. அன்னக்குஞ்சு பால் அருந்துத்
துயில்கிறது. அதற்குக் கிடைத்த பால் எருமை மடியில் இயல்பாகச்
சுரந்தது; சுரந்தமைக்குக் காரணம் தன் கன்றை எருமை நினைந்தது.
கசிந்த மேதி கனைத்தது; கனைத்த ஒலி காரணமாகப் பால் சுரந்தது.
பால் அருந்தி அன்னக் குஞ்சு துயிலத் தேரை தாலாட்டுப் பாடுகிறது!
இதைப் போல நளினமான கற்பனை, முன்னே (35) ஓர் இசையரங்கு:
இங்கே ஒரு தாலாட்டு; நளினம்: தாமரை, கோசல நாட்டில் எருமை
கூடக் கனிந்து கசிந்து வாழ்கிறது!
பாடல் கற்பனை ‘தென்னந்தமிழின்’ என்று தொடங்கும் பாடலுக்கு
மூலமாய் அமைகிறது. 13
