நகர் நீங்கு படலம் - 1695
1695.
குழைக்கின்ற கவரி இன்றி,
கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
ஒரு தமியன் சென்றான்.
‘மழைக்குன்றம் அனையான் - மேகத்தால் மூடப்பெற்ற மலையை
ஒத்தவனாகிய இராமன்; மௌலி கவித்தனன் வரும்’ என்று என்று -
மகுடம் சூடிக்கொண்டு வருவான் என்று நினைத்துநினைத்து; தழைக்கின்ற
உள்ளத்து அன்னாள் முன் - மகிழ்ச்சியால் செழித்தமனம்
உடையவளாகிய அக்கோசலையின் முன்பு; குழைக்கின்ற கவரி இன்றி -
பக்கங்களில்வீசுகின்ற வெண்சாமரை இல்லாமல்; கொற்ற வெண்குடையும்
இன்றி - வெண் கொற்றக்குடையும் இல்லாமல்; இழைக்கின்ற விதி முன்
செல்ல - நன்மை தீமைகளை மெல்ல மெல்லச்செல்லச் செல்லக் காட்டி
நடத்துகின்ற விதி முன்னே அழைத்துச் செல்ல; தருமம் பின்இரங்கி ஏக-
அறக்கடவுள் வருந்திப் பின்னே தொடர்ந்து வர; ஒரு தமியன் சென்றான்-
தன்னந் தனியனாய்ச் சென்றான்.
அரசராவார் முன்னர்ச் சாமரை வீச, பின்னர் வெண்கொற்றக்
குடைபிடிக்க வருவர் ஆதலின் தன் மகனும் அவ்வாறு மகுடம் சூடி
வருவான் என்று தாய்கோசலை எண்ணி மகிழ்ந்திருந்தாள். அவனோ
அவள் கண்ணுக்குத் தன்னந் தனியனாய் வருகிறான். ஆயினும், அவனுக்கு
முன்னால் விதி செல்கிறது. பின்னால் தருமம் இரங்கி அழுதுகொண்டே
வருகிறதுசாமரையும் குடையும் போல என்கிறார் கவிஞர்.
விதி நிகழ்வுகள் முன்தெரிவதில்லை. நிகழ நிகழத்தான் தெரியும்
ஆதலின், ‘இழைக்கின்றவிதி’ என்றது அரிய சொல்லாட்சி. கோலம்
போடுகிற போது போடப் போடவே கோல வடிவுபெறுதல் போலவே
விதியும் தன் வேலையை நிகர்த்தும். 1
